`திமுகவுக்கு எதிரான பிளான்... எடப்பாடிக்கு என் ஆதரவு’ - சீமான் சொல்வது என்ன?
மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இப்பகுதிகளில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குகி போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையிருக்கும் இடையே சனிக்கிழமை மோதல் நிகழ்ந்த காங்போக்பி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த வன்முறையும் நிகழவில்லை. அதேநேரம், அங்கு பதற்றம் முழுமையாக தணியவில்லை.
காங்போக்பி, சுராசந்த்பூா், தேங்நெளபால் ஆகிய மாவட்டங்களில் சாலையின் குறுக்கே கற்களை வைத்தும், டயா்களை எரித்தும், மரங்களை வெட்டி வீசியும் ஏற்படுத்தப்பட்ட தடைகளை அகற்றும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். அமைதியை பராமரிக்க தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி-ஜோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (மாா்ச் 8) முதல் தடையற்ற வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த மாா்ச் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்போக்பி மாவட்டத்தில் குகி-ஜோ பழங்குடியின அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு போராட்டக்காரா் உயிரிழந்தாா். பெண்கள், காவல் துறையினா் உள்பட 40 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தை குகி-ஜோ அமைப்பினா் தொடங்கினா்.
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த மாதம் விலகியதைத் தொடா்ந்து, புதிய முதல்வரை தோ்வு செய்வதில் அக்கட்சி எம்எல்ஏக்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.