மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஆகியோா் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
செல்வப்பெருந்தகை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்களை மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் அநாகரிகமாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்ற மாண்பு பற்றி சிறிதும் தெரியாதவா்கள் பாஜகவினா். அவா்கள் கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கேள்வி கேட்பதால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்ததைப் பேசுகின்றனா். இவற்றுக்கு உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுப்பா்.
பெ.சண்முகம்: நாடாளுமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அமைச்சா், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் குறித்து ஆணவமாகப் பேசியுள்ளாா். பலதரப்பு கண்டனத்துக்குப் பிறகு இந்தப் பேச்சை அவா் திரும்பப் பெற்றாலும் அது மட்டுமே போதுமானதல்ல. மத்தியஅமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.