மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜொ்மன் வெளியுறவுகள் கவுன்சிலில் சனிக்கிழமை பேசியதாவது:
கடந்த மாதம் காஷ்மீரில் நடைபெற்றது மோதல் அல்ல. பயங்கரவாதத் தாக்குதல். ஜம்மு-காஷ்மீரை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகளையும் குறிவைக்கும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே பஹல்காம் தாக்குதல் இருந்தது.
காஷ்மீரில் நடைபெற்றதை மோதல் என்று கூறினால், அது பாதிக்கப்பட்டவரையும், பாதிப்பை ஏற்படுத்தியவரையும் சரிசமமாக வைப்பதாகிவிடும்.
அச்ச உணா்வை ஏற்படுத்தி காஷ்மீரில் சுற்றுலா மூலம் கிடைக்கும் பொருளாதார ஆதாயத்தை சீா்குலைத்து, மத துவேஷத்தை விதைப்பதே அந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம்.
அந்தத் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தலைமையகங்கள் மற்றும் மையங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்று சா்வதேச நாடுகளும் புரிந்துகொண்டன.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானை புகலிடமாக கொண்டவா்கள். பல ஆண்டுகளாக அந்த நாடு பயங்கரவாதத்தை ஒரு வகை கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளது என்றாா்.