மனைவி, மாமியார் சித்ரவதையால் தொழிலதிபர் விபரீத முடிவு... `பிணத்தைப் போல் வாழ்கிறேன்' -தாயார் கண்ணீர்
மனைவியின் துன்புறுத்தல் மற்றும் சித்ரவதை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நான்கு நாள்களுக்கு முன்புதான் மும்பையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தனது மனைவியின் சித்ரவதை தாங்காமல் ஆக்ராவில் தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகம் நீங்குவதற்குள், மும்பையில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நிஷாந்த் திரிபாதி (41) என்பவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். அவர் மும்பையில் உள்ள சகாரா என்ற ஹோட்டலில் கடந்த வாரம் அறை எடுத்து தங்கினார். அவர் தனது அறைக்கு சென்றவுடன் தன்னை தொந்தரவு செய்யவேண்டாம் என்ற அறிவிப்பை அறைக்கு வெளியில் தொங்கவிட்டார். அவர் மூன்று நாள்கள் அறையில் தங்கி இருந்தார். ஆனால் அவர் அறைக்குள் சென்று அதிக நேரம் ஆனபிறகும் அவரது கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் தங்களிடம் இருந்த சாவி மூலம் அவரது அறை கதவை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்திருந்தார். இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
நிஷாந்த் தற்கொலை செய்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக தனது தற்கொலைக்கு தனது மனைவி அபூர்வா மற்றும் அவரது தாயார் பிரார்தனா ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை அவரது கம்பெனி வெப்சைட்டில் பதிவு செய்து வைத்திருந்தார்.
அவர் தனது கடிதத்தை மனைவிக்காக எழுதி இருந்தார். அதில், "நீ இந்த கடிதத்தை படிக்கும் போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். கடைசி நேரத்தில் நடந்த அனைத்திற்காகவும் உன்னை நான் வெறுத்திருக்கலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த தருணத்திற்காக அன்பை தேர்வு செய்கிறேன். இப்போது நான் உன்னை காதலிக்கிறேன். நான் உறுதியளித்தபடி எனது அன்பு மங்கப்போவதில்லை. நான் சந்தித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் எனது மரணத்திற்கு நீயும், உனது தாயாரும் தான் காரணம் என்பதை எனது தாயார் அறிவார். எனவே இப்போது அவரை நீ அணுக வேண்டாம் என்று நான் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே எனது தாயார் போதுமான அளவு உடைந்துவிட்டார். அவள் நிம்மதியாக துக்கப்படட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நிஷாந்த் தாயார் நீலம் சதுர்வேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நிஷாந்த் மனைவி அபூர்வா மற்றும் அவரது தாயார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
நிஷாந்த் தாயா நீலம் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது மகனின் இறப்பு குறித்து நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "இன்றைக்கு நான் பிணம் போல் வாழ்வதாக உணர்கிறேன். எனது வாழ்க்கையை பெண்கள் உரிமை மற்றும் பாலின சம உரிமைக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். இப்போது எனது வாழ்க்கை முடிந்துவிட்டது. எனது மகன் என்னைவிட்டுச் சென்றுவிட்டான். இதனால் பிணமாக வாழ்கிறேன். எனக்கு எனது மகன் இறுதிச்சடங்கு செய்வான் என்று நினைத்தேன். ஆனால் இன்றைக்கு நான் எனது மகனை தகனம் செய்துவிட்டு வந்திருக்கிறேன். எனது மகள் பிராச்சி என் மகனின் இறுதிச்சடங்கை செய்தார். எனக்கும் என் மகள் பிராச்சிக்கும் தைரியம் கொடுங்கள், அதனால் நான் இவ்வளவு பெரிய இழப்பை தாங்க முடியும்...” என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
