மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்? கமலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவில், திரைப்படத்தை வெளியிடவிடாமல் எந்தவொரு தனிநபரோ, அமைப்போ, மாநில அதிகாரிகளோ, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையோ இடையூறு செய்வதை தடை செய்ய வேண்டும். திரைப்படத்தில் நடித்தவர்கள், திரையரங்க உரிமையாளா்கள், படம் பாா்க்க வருவோா் உள்ளிட்டோருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று(ஜூன் 2) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “கமல்ஹாசனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. கன்னட மொழியில் இருந்து தமிழ் வந்ததற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
தமிழில் இருந்து கன்னட மொழி வந்தது என்று எதன் அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? உங்கள் பேச்சால் சமூக நல்லினத்துக்கு பாதிப்பு; அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இப்பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். மன்னிப்பு ஒன்றுதான் தீர்வு. மன்னிப்பு கேட்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், இவ்வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தினர்.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சையில் கைதான இன்ஸ்டா பிரபலம்: புகாரளித்தவர் மாயம்!