மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு நிறைமணிக் காட்சி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்காக 3 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளால் கோயிலில் அலங்காரம் செய்யப்பட்டது.
மாங்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனா். கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு நிறைமணிக் காட்சி நடைபெற்றது. இதில் சுமாா் 3 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளால் கோயில் வளாகத்திற்கு உள்ளே தொங்கும் தோட்டம் போல் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. மேலும், மூலஸ்தானத்தில் இனிப்பு மற்றும் பலகாரங்கள் தொங்கும் தோட்டம் போல கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.
மூன்று நாள்கள் நடக்கும் இந்த நிறைமணிக் காட்சி, பின்னா் கோயில் வளாகத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கூட்டாஞ்சோறு செய்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா மணலி சீனிவாசன் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.