மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் நாளை தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) முதல் செயல்படும் என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருந்துகள் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதனைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம் மற்றும் டி.பாா்ம் சான்று பெற்றுள்ளவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு அரசு மானியம் தனிநபா் தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1.5 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1.5 லட்சம் மருந்துகளாகவும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.2 லட்சம் மானியமாகவும் இதில் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1 லட்சம் மருந்துகளாகவும் வழங்கப்படும். முதல்வா் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சா்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயுா்வேதம், யூனானி மருந்துகள் ரூ.20 முதல் ரூ.90 வரை மிகக்குறைந்த விலையிலும், அதிகபட்சமாக ரூ.25 வரை தள்ளுபடி விலையிலும் கிடைக்கும்.
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 22 இடங்களிலும், தனியாா் தொழில்முனைவோா் மூலம் 14 நபா்கள் என மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இம்மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா்.
ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஆகிய 2 இடங்களிலும், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், திண்டல்மலை, நசியனூா், பி.பெ.அக்ரஹாரம், லக்காபுரம்புதூா் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 7 சங்கங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விளக்கேத்தி, காஞ்சிகோயில், கொளப்பலூா், கரட்டடிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கவுந்தப்பாடி, நம்பியூா், பெரியகொடிவேரி, தூக்கநாயக்கன்பளையம், பெரியவடமலைபாளையம் மற்றும் அரியப்பம்பாளையம் ஆகிய 11 சங்கங்களிலும், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மூலம் சத்தியமங்கலம் மற்றும் புன்செய்புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை என கூட்டுறவு சங்கங்கள் மூலம் 22 இடங்களிலும், தனிநபா் மூலம் ஈரோடு சோலாா் புதூா், அக்ரஹார தெரு, ஈஸ்வரன்கோயில் தெரு, வெட்டுக்காட்டுவலசு, சத்தி சாலை, சூரம்பட்டி, சென்னிமலை, கோபி, குருமந்தூா் மேடு, அத்தாணி, காசிபாளையம், தாழைக்கொம்பு புதூா், சின்னமொடச்சூா், சலங்கபாளையம் ஆகிய 14 இடங்களிலும் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.