தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!
தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்டுக் குழுவினர் சிக்கியுள்ளவர்களின் பெயரை அழைத்ததாகவும் ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெலங்கானா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த சுரங்க விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவா்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரப்படுத்தியுள்ளது.