சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று (பிப்.22) தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுடன் மங்கன் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன குழு ஒன்றுக்கும் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதுபோன்ற பயிற்சிகளின் மூலம் அப்பகுதி மக்கள் அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது கற்றுகொடுக்கப்படுகின்றது. மேலும், அந்த மையத்தின் பயிற்சியாளர்களின் மூலம் அவசரகால மற்றும் பேரிடர் சூழ்நிலைகளில் பல்வேறு கருவிகளையும் முறைகளையும் பயன்படுத்தி, பேரிடரில் சிக்கியுள்ளோரை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்கான முக்கியமான நுட்பங்கள் தன்னார்வலர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இதையும் படிக்க: சுற்றுலாத் தளத்தில் மூழ்கிய பயணிகள்! 2 இளைஞர்கள் பலி!
இதுகுறித்து அந்த பயிற்சி மையத்தின் தலைமை இயக்குநர் காஸி ஷெர்பா கூறியதாவது, அபயாகரமான பகுதிகளில் சிக்கியுள்ளோரை மீட்க தன்னார்வலர்கள் விரைந்து செயல்படும் வகையில் இந்த பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் களப்பயிற்சியானது நேற்று (பிப்.22) 10,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மீட்புக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டு மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மீட்புப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தன்னார்வலர்களுக்கு 10 சதவீத மருத்துவ காப்பீட்டு சலுகைகள் அடங்கிய ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.