முட்டையில் பெப்பர் போடாததால் ஆத்திரம்? ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்; வைரல் வீடியோவின் பின்னணி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை-திருப்பூர் புறநகரில் ஏரிப்பாளையம் என்ற பகுதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்துக்கு உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் லோகேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்டம் இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள செந்தில் உள்ளிட்ட 7 பேர் கடந்த 15-ஆம் தேதி இரவு உணவருந்தச் சென்றுள்ளனர்.
அப்போது, செந்தில் முட்டை ஆஃப் பாயில் கேட்டுள்ளார். இதையடுத்து, கடை ஊழியர் முருகன் ஆஃப் பாயில் முட்டையைக் கொடுத்துள்ளார். அதில், மிளகுத் தூள் போடாததால் உணவக ஊழியரான முருகனுக்கும், செந்திலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மதுபோதையிலிருந்த செந்தில் மற்றும் அவருடன் வந்தவர்கள் கடை ஊழியர் முருகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க வந்த உணவகத்தின் உரிமையாளரையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை போலீஸார் அந்த உணவகத்தில் விசாரணை நடத்தினர்.
அதில், லோகேஸ்வரனுடன் வந்தவர்கள் உணவக ஊழியரைத் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, உணவக உரிமையாளரான வகீதா பேகம் அளித்த புகாரின் பேரில், லோகோஷ்வரன் உள்ளிட்ட 7 பேரை அழைத்து போலீஸார் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.