முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அம்மாநிலத்தின் பல்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் இயக்குநர் பொகாதாநந்தா ரேவதி, செய்தியாளர் பந்தி சந்தியா (எ) தன்வி யாதவ் மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்திலுள்ள ‘நிப்புகொடி’ எனும் பக்கத்தின் உரிமையாளர் உள்பட 3 பேரின் மீது தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவு செயலாளர் காவல் துறையினரிடம் புகாரளித்தார்.
அந்த புகாரில், பல்ஸ் டிவி நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் தெலங்கானா முதல்வர் குறித்து அவதூறு கேள்விகளை கேட்டதாகவும், அதனால் தூண்டப்பட்ட அந்நபர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை தகாத வார்த்தைகளால் தாக்கிப் பேசியதை விடியோ பதிவு செய்து ‘நிப்புகொடி’ எனும் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விடியோ மூலம் தவறான செய்திகள் மற்றும் முதல்வர் குறித்து அவதூறுகளை பரப்ப முயற்சித்துள்ளதாகவும் இதனால் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க:ஹோலி பண்டிகை: மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறை உத்தரவு!
இதன் அடிப்படையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 2 ஹார்டு டிஸ்க், பல்ஸ் மீடியா சின்னம் பொறிக்கப்பட்ட மைக் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக, தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரேவதி என்பவர் கடந்த ஆண்டு (2024) ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தகாத வார்த்தைகளினால் திட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மேலும், தெலங்கானா மாநில மின் விநியோக நிறுவனம் குறித்து தவறான செய்திகள் பரப்பியதற்காக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் பத்திரிக்கையாளரான தன்வி யாதவ் தெலங்கானா அரசு மற்றும் முதல்வர் குறித்து தொடர்ந்து அவதூறு விடியோக்களை பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.