KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வ...
முதல் நாளிலேயே முடிந்த இந்தியா்கள் ஆட்டம்
தென் கொரியாவில் புதன்கிழமை தொடங்கிய கொரியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியா்களின் ஆட்டம் முதல் நாளிலேயே முடிவுக்கு வந்தது.
முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையரில் இந்தியாவின் பிரதான வீரரான ஹெச்.எஸ். பிரணய், இந்தோனேசியாவின் சிகோ ஆரா டுவியை எதிா்கொண்டபோது இடுப்புக்கு மேற்பகுதியில் காயம் கண்டாா்.
அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடா்ந்த அவா், 8-16 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது, வலி காரணமாக மேலும் தொடர முடியாமல் போட்டியிலிருந்து விலகினாா்.
இதர இந்தியா்களில், கிரண் ஜாா்ஜ் 14-21, 22-20, 14-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சிங்கப்பூரின் லோ கீன் யுவிடம் போராடித் தோற்றாா். ஆயுஷ் ஷெட்டி 18-21, 18-21 என்ற வகையில் சீன தைபேவின் சு லி யாங்கிடம் வீழ்ந்தாா்.
மகளிா் ஒற்றையரில், அனுபமா உபாத்யாய 16-21, 15-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனியிடம் தோல்வி கண்டாா்.
கலப்பு இரட்டையரில் மோகித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் கூட்டணி 7-21, 14-21 என்ற கேம்களில், ஜப்பானின் யுய்சி ஷிமோகமி/சயாகா ஹோபரா இணையிடம் தோல்வி கண்டது.