பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் - அரசாணைக்கு உயர் நீதிமன...
மேகாலாயா தம்பதி மிஸ்ஸிங் வழக்கு: தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கொன்ற மனைவி; சிக்க வைத்த கைடு
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது தேனிலவை கொண்டாட மேகாலயா மாநிலத்திற்கு சென்றனர். அங்கு சென்ற இடத்தில் கடந்த மாதம் 23ம் தேதி தேனிலவு சென்ற தம்பதியினர் காணாமல் போய்விட்டனர். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மேகாலயா போலீஸார் அத்தம்பதியை தேடி வந்தனர்.
கிடைத்த கணவனின் உடல்..!
மேகாலயா மற்றும் மத்திய பிரதேச போலீஸார் சேர்ந்து அவர்களை தேடி வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் அங்குள்ள பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மனைவியின் உடல் கிடைக்கவில்லை. ராஜாவின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ட்ரோன் உதவியுடன் போலீஸார் சோனத்தை தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மட்டும் நின்றது.

சோனத்தையும் கொலையாளிகள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் இக்கொலையில் திடீர் திருப்பமாக ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் இக்கொலை தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நந்த்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை இந்தூர் சிறப்பு விசாரணைக்குழுவினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி இரவோடு இரவாக இக்கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸார் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்தனர்.
இக்கொலைக்கான சதித்திட்டத்தை சோனம்தான் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. சோனம் கூலிப்படை அமைத்து இக்கொலையை செய்துள்ளார். கொலை நடந்து 7 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து மேகாலயா முதல்வர் சங்கா போலீஸாரை பாராட்டி இருக்கிறார். இக்கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா வழிகாட்டி கொடுத்த துப்பு
கொலை செய்யப்பட்ட தொழிலதிபரான ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை பார்க்க வந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றிப்பார்க்க சென்றனர். அப்படி சென்ற இடத்தில் சிரபுஞ்சியில் உள்ள கிழக்கு காசி மலைப்பகுதிக்கு சென்றனர். அங்கு சென்றபோதுதான் தேனிலவு தம்பதி காணாமல் போகினர். அவர்கள் காணாமல் போய் 10 நாட்கள் கழித்த பிறகுதான் ராஜா ரகுவன்சியின் உடல் ஆழமான மலைப்பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொடுத்த தகவல் இக்கொலையில் துப்பு துலங்க வசதியாக இருந்தது.
இருவரும் காணாமல் போன மே 23ம் தேதி காலை 10 மணிக்கு அவர்கள் அங்குள்ள ஒரு மலையில் 3 ஆயிரம் படிக்கட்டுகள் ஏறி இருக்கின்றனர். அதோடு அவர்களுடன் 3 பேர் இருந்ததை தான் பார்த்ததாக சுற்றுலா வழிகாட்டி தெரிவித்துள்ளார். அவர்கள் மலை படிக்கட்டில் ஏறுவதற்கு தான் உதவி செய்வதாகவும், ஆனால் அவர்கள் வேறு ஒரு சுற்றுலா வழிகாட்டியின் உதவியை நாடியதாகவும் அந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேனிலவு வந்த தம்பதியுடன் வேறு சிலர் இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் பதுங்கி இருந்த சோனம் தனது வீட்டிற்கு நேற்று போன் செய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட இந்தூர் போலீஸார் காசிப்பூர் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்தே சோனம் போலீஸில் சரணடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர். சோனம் கூலிப்படை அமைத்து திட்டமிட்டு தனது கணவனை கொலை செய்து இருப்பதாக மேகாலயா டிஜிபி நான்கிராங் தெரிவித்தார். இக்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.