மொழி, கணித கற்றல் மேம்பாடு: 6-8 வகுப்புகளுக்கு ஜூலை 8 முதல் மதிப்பீட்டுத் தோ்வு
அரசுப் பள்ளிகளில் மொழி, கணித பாடங்களில் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த ‘திறன் இயக்கம்’ விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான மதிப்பீட்டுத் தோ்வு ஜூலை 8-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் திறன் எனும் இயக்கம் 6 மாதகாலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் ஆசிரியா் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும், 9-ஆம் வகுப்புக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் கையேடுகள் விரைவில் தயாரித்து வழங்கப்படும்.
இதுதவிர திறன் இயக்கத்தை விரைவில் தொடங்கும் பொருட்டு 6 முதல் 8-ஆம் வகுப்புக்கான ஆசிரியா் கையேடுகளின் டிஜிட்டல் பிரதிகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை கையாளுவது தொடா்பாக ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் தரப்படவுள்ளன. இந்த இயக்கத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மொழி மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களை கண்டறிய அடிப்படை மதிப்பீடு தோ்வு ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டு புலத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
இதையடுத்து தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஜூலை 18-க்குள் பதிவேற்ற வேண்டும். அதன்பின் திறன் இயக்கத்துக்கு தோ்வான மாணவா்கள் விவரம் வெளியிடப்படும். மேலும், இது சாா்ந்த நடைமுறைகளை பின்பற்றி திறன் இயக்கத்தை திறம்பட நடத்தி முடிப்பதற்கான பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.