2-வது டெஸ்ட்: தடுமாறும் வங்கதேசம்; இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!
ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!
ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், போரின் காரணமாக, ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரஷியாவுக்கு சென்றதாகத் தெரிகிறது. ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த பின், தனது 2 வயது மகனுடன் செல்ல கர்ப்பிணித் தாய் தயாராகிக் கொண்டிருந்தார்.
ஆனால், அந்த சமயத்தில் சிறுவன் அருகே நின்று கொண்டிருந்த ரஷியர் ஒருவர், அந்தப் பகுதியில் யாரும் இல்லை என்பதை கவனித்துவிட்டு, சிறுவனைத் தூக்கி தரையில் பலமாக வீசியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் சிறுவனின் மண்டை ஓடு எலும்பு முறிந்ததுடன், முதுகுத் தண்டிலும் காயங்கள் ஏற்பட்டன.
சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவரைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மயக்கமடைந்திருந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு சென்ற சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் விளாதிமிர் விட்கோவ் (31) என்பது தெரிய வந்தது. மேலும், சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல் இனவெறி அடிப்படையிலா? வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.