``ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது'' - தேர்தல் ஆணையம் பதில்
மகாராஷ்டிராவில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த முறைகேடுகளுக்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாக பகிரங்கக் குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்.

தற்போது பீகாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "2024 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வென்றது. இதே உத்தியை பீகார் தேர்தலிலும் பின்பற்ற பாஜக திட்டம் வகுத்துவிட்டது. இம்முறையும் மேட்ச் ஃபிக்ஸிங் நடக்கும்" என்று பாஜக மீதும் தேர்தல் ஆணையம் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம், "இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. அடிப்படை ஆதாரமற்றது. தேர்தல்களின்போது அயராது பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை அவமதிக்கும் செயல் இது. சட்டத்தின் ஆட்சிக்கும் இது பெரும் அவமானம் சேர்க்கும்.

வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வொரு தேர்தல் செயல்முறையும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறது. அதுவும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவது நாட்டுகே தெரிந்த வெளிப்படையான உண்மை.
வாக்காளர்கள் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்காத தேர்தல்களுக்குப் பின்னர், தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளதாகக் கூறி அவதூறு பரப்ப முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது" என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.