வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!
கட்டிய மனைவியை ரூ. 36 லட்சம் வரதட்சிணைக்காக தாய் உடன் சேர்ந்து அடித்து உதைத்து, தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு, நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த, இறந்த பெண்ணின் மகன் (சுமார் ஆறு வயது) கூறுகையில், "அவர்கள் என் அம்மா மீது ஏதோ ஒன்றை ஊற்றி, அவரை அறைந்து, லைட்டரை பயன்படுத்தி தீ வைத்தனர்" என்றார்.
கிரேட்டர் நொய்டாவில் சிர்சா கிராமப்பகுதியைச் சேர்ந்த விபின் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. இந்தக் குடும்பத்தில் நிக்கியின் சகோதரியும் மருமகளாக உள்ளார். விபினின் சகோதரனை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், நிக்கி குடும்பத்தினர் ரூ. 36 லட்சம் வரதட்சிணை தரவில்லை என்றுக் கூறி கடந்த வியாழக்க்கிழமை விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாகத் தாக்கி, நிக்கி மீது ஆசிட் ஊற்றி தீவைத்துக் கொன்றுள்ளனர்.
இந்த கொடூரமான சம்பவத்தின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விடியோவில், கணவனும் மாமியாரும் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்கின்றனர். இதை நிக்கியின் சகோதரி காஞ்சன் விடியோ எடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நிக்கியின் சகோதரி காஞ்சன், ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு தனது தங்கையை கணவர் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறினார்.
கிரேட்டர் நொய்டா கூடுதல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (ADCP) சுதிர் குமார் கூறுகையில், "ஆகஸ்ட் 21 அன்று, ஃபோர்டிஸ் மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது, தீக்காயங்களுடன் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. போலீசார் உடனடியாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்றனர், ஆனால் மருத்துவமனையை அடைவதற்குள் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பலினார்” என்றார்.
”அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் செய்தனர். பாதிக்கப்பட்டவரின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், நிக்கியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கஸ்னா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.
"விபின் கைது செய்யப்பட்டுள்ளார், மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று அதிகாரி கூறினார்.