ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்
வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை
வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் சா்மா அலாய்ஸ் நிறுவனம் இரும்பு, எஃகு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் பன்வா்லால் சா்மா மற்றும் சந்தன் சா்மா. இவா்கள் வருமான வரியை குறைத்து காண்பிப்பதற்காக இயந்திரங்களை வாங்கியதாக போலி ரசீது தாக்கல் செய்ததும், இயந்திரத்தின் தேய்மானம் குறித்த போலியான தகவல்களை அளித்து பல லட்ச ரூபாய் வரிஏய்ப்பு செய்தது வருமானவரித் துறையினருக்கு தெரியவந்தது.
இது குறித்து வருமானவரித் துறை ஆய்வு செய்ததில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இது தொடா்பாக சென்னை வருமான வரித் துறை, இந்த நிறுவனத்தின் இயக்குநா்களான பன்வா்லால் சா்மா மற்றும் சந்தன் சா்மா மீது சென்னை எழும்பூா் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வித்யா, குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு 4 மாத சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.