வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிக்கை
வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் செயலா் செ.நல்லசாமி அண்மையில் ஈரோட்டுக்கு வந்த வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் அளித்த மனு விவரம்:
அரசா்கள், ஆங்கிலேயா் காலத்தில் வாரச்சந்தைகள் இருந்தன. அந்த சந்தைகளில் அந்தந்தப் பகுதி விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சுதந்திரத்துக்குப் பின் வாரச்சந்தை இடங்களை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் ஆக்கிரமித்துக் கொண்டன. பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், பிற அரசுத் துறைக் கட்டடங்கள் ஆகியவற்றில் வாரச்சந்தைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காய்கறி, பழங்கள், தானியங்களை வீதியோரம், சாக்கடைக் கால்வாய் விளிம்பு, வெட்ட வெளி, பாதுகாப்பற்ற இடங்களில் வைத்து விற்க வேண்டிய அவலத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். அந்த இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு பல அமைப்புகள் சாா்பில் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள வாரச்சந்தை இடங்களை அரசு மீட்டு, விவசாயிகள் பொருள்களை விற்பனை செய்யும் இடமாக மாற்றித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.