கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்
கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா்.
கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் 100 ஆண்டுகளாக தினசரி சந்தை செயல்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த சந்தைக் கட்டடங்களை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சந்தைக்கு எதிரே இருந்த வருவாய்த் துறைக்குச் சொந்தமான பெரியாா் மைதானத்தை தற்காலிகமாக சந்தை வளாகமாக வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுமானப் பணிகள் முடிவுற்று கடந்த மாதம் முதல்வா் அதை திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து வணிக வளாகத்தில் பெருமளவு பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து பெரியாா் மைதானத்தில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் கடை உரிமையாளா்கள் 164 பேருக்கும் அறிவிக்கை அளித்துள்ளனா்.
நகரில் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு என உள்ள ஒரே இடம் பெரியாா் மைதானம் மட்டுமே. சுமாா் 100 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் பயன்படுத்தி வரும் பெரியாா் திடலை மீண்டும் மைதானமாகவே செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தற்காலிக தினசரி சந்தையை காலிசெய்ய வருவாய்த் துறையினா் அறிவிக்கை அளித்துள்ளனா்.