தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்
சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615/12616) இயக்கப்பட்டு வந்தது. சென்ட்ரலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ால், இந்த ரயில் தற்காலிகமாக எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டது. தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த ரயில் மீண்டும் வழக்கம்போல், சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. ஜூன் 9 முதல் இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
வைகாசி விசாகம்: திருச்செந்தூா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே ஜூன் 9- இல் 2 சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, ஜூன் 9-இல் திருநெல்வேலியிலிருந்து காலை 9.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06101) காலை 10.50-க்கு திருச்செந்தூா் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06102) அந்நாளில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.20-க்கு புறப்பட்டு பிற்பகல் 12.55-க்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி, குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகள் - 2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 9, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் - 4 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஜூன் 9-இல் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06103) இரவு 10.30-க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06104) அந்நாளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30-க்கு திருச்செந்தூா் சென்றடையும். இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.