"விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்
"கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது..." என்று அதிமுக குறித்து விமர்சித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

ப.சிதம்பரத்தின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூரில் நடந்த நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். யார் கட்சி தொடங்கினாலும் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது இயல்பு. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனர்ஜியான ஆதரவு இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு வடிவமாக உருமாறி வாக்குகளை பெறுவார்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது.
எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். சீர்தூக்கி பார்க்கும்போது திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதால் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. மகளிர் உரிமைத்தொகை பெரும்பாலான பெண்களுக்கு சென்று சேர்கிறது. சிலருக்கு சேராமல் இருப்பது நிர்வாக காரணங்களால் இருந்தாலும் அந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது
முன்பெல்லாம் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது மாறுபட்ட தலைமை உள்ளது. கட்சியில் குழப்பம் நீடிக்கின்றது. ஒற்றுமையாக இல்லை. அது மட்டுமின்றி ஒரு பஞ்சாயத்து வந்தால் டெல்லி சென்று வருகிறார்கள். அதிமுக பெரிய கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது.
தமிழ்நாட்டில் ஒரு நியதி உள்ளது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது விளங்காது. அதனால் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த வெற்றிடத்தை மற்ற கட்சிகளும் நிரப்ப வாய்ப்பு உள்ளது.

விஜய்க்கு என்று தனி ஆதரவு உள்ளது. அவருடைய ரசிகர்கள் அனைத்துக் கட்சியிலும் உள்ளார்கள். அவர்கள் தவெக ஆதரவாளர்களாக மாறும்போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும்.
2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.
விளையாட்டையும், அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது.இந்தியா, பாகிஸ்தான் ராஜாங்க உறவு ஒன்றும் முறியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் இருந்தால் அதை விளையாட்டில் கலக்கக்கூடாது. மோடி மட்முமல்ல, நானும் சிவ பக்தர்தான், தமிழ்நாட்டில் முருகனையும் விநாயகரையும் வழிபடும் 75 சதவிகிதம் பேர் சிவ பக்தர்கள்தான்.
ஜிஎஸ்டி வரி குறைப்பை நான் வரவேற்கிறேன். ஆனால், இதை முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். உலகத்தில் வாட், ஜிஎஸ்டி எதுவாக இருந்தாலும் ஒரே வரிதான் உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் தனித்தனியாக வரி உள்ளது இந்தியாவில்தான் இதுபோல் குழப்பமான ஜிஎஸ்டி-யை விதித்து சீர் திருத்தியுள்ளார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பில் இன்னும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரிதான் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியே கூடாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து 1967 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்கு ஏக்கம் உள்ளது. அதே ஏக்கம் தான் எதிர்காலத்திலும் இருக்கும். 2006 ஆம் ஆண்டு வாய்ப்பு வந்தபோது நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த வாய்ப்பு மறுபடியும் வந்தால் காங்கிரஸ் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளும்" என்றார்.