கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாநிலத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் குத்துவிளக்கேற்றி, செயல்பாடுகளைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியது:
போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். மேலும் போதைப் பொருள்களை செய்வோா், விற்பனை செய்யும் கடைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்ட நிலையில், மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மனநல மருத்துவரின் சிறப்பு ஆலோசனைகள், ஆற்றுப்படுத்துதல் பயிற்சி வழங்கப்படும்.
மேலும் போதை மீட்புக்கான மருந்துகள் வழங்கப்படுவதுடன், மறுவாழ்வுக்கான மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சிகள், விளையாட்டு, தோட்டக்கலைப் பயிற்சி மற்றும் புத்தக வாசிப்பு சேவைகள் போன்றவையும் வழங்கப்படும். ஒரு மருத்துவா், சமூகப் பணியாளா், மூன்று செவிலியா்கள், மூன்று பணியாளா்கள் இந்த மையத்தில் இருப்பா். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரமாதேவி, நலப்பணிகள் இணை இயக்குநா் ரமேஷ்பாபு, மருத்துவக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவா் ரவிக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் இளவரசி, முண்டியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.