விழுப்புரம்: `தமிழுக்கு முன்னுரிமை அளித்து பெயர் பலகை அமைக்க வேண்டும்'- ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைந்திருப்பது மட்டுமன்றி ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் அமைந்திருக்கின்றன. இவற்றில் பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் செஞ்சிக்கோட்டை, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், எமதண்டீஸ்வரர் ஆலயம், கல்மரப் பூங்கா ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக செஞ்சிக்கோட்டை மற்றும் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் ஆகியவற்றைப் பார்வையிட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கில் மக்கள் வருவது மட்டுமன்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். எனவே பல இடங்களில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஓர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். ``விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருக்கும் பெயர் பலகைகள் வரும் மே 15-ம் தேதிக்குள் தமிழில் வைக்க வேண்டும். மேலும் பெயர் பலகையில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரை பெரிய அளவிலான தமிழ் எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள், தமிழ் எழுத்துக்களை விட சிறிய அளவில் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பெயர் பலகைகள் தமிழில் இல்லை என்றால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும். இதற்கென தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த உத்தரவு குறித்து தமிழக முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.