'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கைலாயம் எனப் பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஏழு மலையலைக் கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு மூன்று பேர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் புவனேஷ்வரன் (18) தனது பள்ளி நண்பர்களான முத்துக்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோருடன் கடந்த ஏப்.17 அன்று தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு நேற்று ஏப்.18 காலை வெள்ளியங்கிரிக்கு வந்தடைந்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று இரவு மலையிலிருந்து இறங்கும்போது, ஏழாவது மலையில் புவனேஷ்வரன் கால் தவறி சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் புவனேஷ்வரனின் இடது காதின் அடியிலும், தலையின் பின் பக்கத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே புவனேஷ்வரனை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புவனேஷ்வரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து புவனேஷ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தற்போது பூண்டிக்கு வந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.