2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா்.
திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றாா். இந்நிலையில், கோவைக்கு சனிக்கிழமை வந்த அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காளப்பட்டியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: கூட்டணியைப் பற்றி கட்சித் தொண்டா்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அது தொடா்பாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். பாஜக நிா்வாகிகள் பூத் கமிட்டியை சரி செய்ய வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் வெற்றி பெற்று அதிகப்படியான உறுப்பினா்களுடன் சட்டப் பேரவைக்குச் செல்வோம்.
திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும். அதிமுக தலைவா்கள், தொண்டா்களோடு இணைந்து நாம் பணியாற்ற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட கோவை கோட்டத்தின் 8 மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விசைத்தறி உரிமையாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு:
கூலி உயா்வுக் கோரி திருப்பூா் மற்றும் கோவை மாவட்டங்களைச் சோ்ந்த விசைத்தறி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த 30 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா். சூலூா் அருகேயுள்ள சோமனூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 5 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவைக்கு சனிக்கிழமை வந்த நயினாா் நாகேந்திரன், சோமனூரில் விசைத்தறி உரிமையாளா்களை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தாா்.
அப்போது, இந்தப் பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.