மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு விடுமுறை, சமையல் அறைக்கு சீல்- நாமக்க...
வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர்: விலகாத மர்மமும் விடை தெரியாத பல கேள்விகளும்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’பைசன்’ படம் வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் ஒலிக்கும் பெயராகி இருக்கிறது ’வெங்கடேச பண்ணையார்’.
தென் மாவட்டமான தூத்துக்குடி பகுதியில் நடக்கும் ஒரு குழு மோதல்களுக்கிடையிலும் சாதிய அடக்குமுறைகளுக்கிடையேயும் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து சர்வதேச அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசன் என்பவரின் கதைதான் பைசன். படத்தில் லால் நடித்திருக்கும் கேரக்டர் தொண்ணூறுகளில் தெற்கே பிரபல பிரமுகராக வலம் வந்த வெங்கடேச பண்ணையாரைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.
வெங்கடேச பண்ணையாருக்கும் அதே பகுதியில் மாற்று சமூக மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய பசுபதி பாண்டியனுக்கும் தனிப்பட்ட மோதலாகத் தொடங்கி, அந்த மோதல் இருதரப்பிலும் பல உயிர்களைக் காவு வாங்கியது.

முன்கதை இப்படி இருக்க, 2001 – 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படுகிறார் வெங்கடேச பண்ணையார்.
வெங்கடேச பண்ணையார் – பசுபதி பாண்டியன் மோதல்தான் ஊரறிந்த விஷயமாக இருந்த நிலையில் போலீஸ் ஏன் வெங்கடேச பண்ணையாரை என்கவுன்டர் செய்தது என்கிற கேள்வி அப்போது முதல் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சரியான பதில் இன்று வரை கிடைத்தபாடில்லை.
என்கவுன்டருக்கான காரணம் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலும் கூட இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த என்கவுன்டர் குறித்து இப்போது யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பலரும் அவர்களுக்குத் தெரிந்த (?) பலவிதமான தகவல்களைச் சொல்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்த என்கவுன்டர் தொடர்பாக அப்போது பணிபுரிந்த வார இதழில் கட்டுரை ஒன்றை எழுதி, அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் ஆனவன் நான் என்கிற பின்னணியில் சில விஷயங்களை இங்கு பகிர்கிறேன்
மேற்படி அக்கட்டுரை வெங்கடேச பண்ணையாரின் நண்பரும் இப்போது திரைப்படத் தயாரிப்பாளராக இருக்கும் பெப்சி முரளி மற்றும் வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி உள்ளிட்ட பலரிடம் பேசி எழுதப்பட்டது.
கேரள பின்னணி
சர்வதேச அளவில் நிதி சார்ந்த பிசினசில் ஈடுபட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சென்னையில் பூந்தமல்லி சாலையில் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்தில் வெங்கடேச பண்ணையாரின் நண்பர் ஒருவருக்கு நஷ்டம்.
பணத்தை அந்த நண்பர் திருப்பிக் கேட்க, 'நிபந்தனைகளுக்குச் சம்மதித்து எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்’ என்கிறது அந்த நிறுவனம்.

விவகாரம் வெங்கடேச பண்ணையாரிடம் போக தன் நண்பருக்காக அதில் தலையிடுகிறார் அவர்.
பெப்சி முரளி உள்ளிட்ட தன் சகாக்களுடன் அந்நிறுவன அலுவலகம் சென்று பேசுகிறார்.
இப்போது விவகாரம் போலீஸுக்கு வருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் வெங்கடேச பண்ணையார் மீது புகார் தருகிறார்கள்.
இந்தப் புகார் தொடர்பாக விசாரிக்கவே வெங்கடேச பண்ணையாரைத் தேடிச் சென்றதாகக் குறிப்பிட்ட போலீஸ், அதிகாலை வேளையில் சென்னை லயோலா கல்லூரி அருகே அவர் தங்கியிருந்த ஒரு அபார்ட்மெண்டில் வைத்துச் சுட்டுக் கொன்றது.
மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர், அப்போது தமிழக அரசியல் அரங்கில் முக்கிய பதவி வகித்த கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் தனக்கிருந்த தொடர்பைப் பயன்படுத்தியதன் தொடர்ச்சியாகவே என்கவுன்டர் நடந்ததாகக் குறிப்பிட்டது அக்கட்டுரை.

உடனே, அந்த உரிமையாளர் தனக்கும் தமிழ்நாட்டில் செயல்பட்ட அந்த நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பெரிந்தல்மன்னா நகர நீதிமன்றம் கட்டுரை எழுதியவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
பிறகு வழக்கு பல ஆண்டுகள் நடந்து கடைசியில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது என்கவுன்டர் விஷயத்துக்கு வருவோம்.
ஒரு நிறுவனம் தந்த அந்த ஒரு புகாரை வைத்து என்கவுன்டர் என்கிற முடிவுக்கு போலீஸ் போகுமா? ஏனெனில் அதற்கு முன் வெங்கடேச பண்ணையார் மீது பெரிய புகார் என ஏதுமிருந்ததாகத் தகவல்கள் இல்லை. தன் சமூக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் அந்த மக்கள் தொடர்புடைய பிரச்னைகள் என்றால் மட்டுமே குரல் கொடுத்து வந்தார் அவர்.

ஒருவேளை அந்நிறுவனத்துக்கு இருந்த அரசியல் தொடர்பான அந்த கேரள முக்கியப் புள்ளிக்காக தமிழக அரசு இந்த என்கவுண்டருக்குச் சம்மதித்ததா? அப்படியெனில் அதற்குப் பிறகு அமைந்த திமுக அரசு இந்த என்கவுண்டர் குறித்து விசாரிக்க ஆர்வம் காட்டாதது ஏன்?
வெங்கடேச பண்ணையார் சார்ந்த சமூகத்தின் ஓட்டுகளைப் பெற மட்டுமே உடனடியாக வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை எம்.பி. ஆக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கியதா திமுக அரசு?
வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவே பல ஆண்டுகள் ஆனது. இந்தத் தாமதமே வழக்குத் தள்ளுபடி செய்யப்படவும் காரணமானது. தாமதத்துக்கான காரணமும் புதிர்தான்.

அந்தச் சமயத்தில் சிபிஐ அங்கம் வகிக்கும், மத்திய அரசின் உள்துறையின் இணை அமைச்சராக இருந்தும் ராதிகா செல்வியால் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐயின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடியாததன் காரணமும் தெரியவில்லை.
இப்படி பல கேள்விகள் இந்த விவகாரம் தொடர்புடைய ஆனால் இன்னும் விடை காண முடியாதவைகளாகவே நிற்கின்றன..!















