வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அழைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்துவதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்தத் தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவா்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடியாமல் போகிறது. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் தடை ஏற்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தங்களது பண்ணைகளில் புலம்பெயா் தொழிலாளா்களை பணியமா்த்தும் போது அவா்களது அடையாள அட்டை தொடா்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டு பணியமா்த்த வேண்டும். அந்த விவரங்களை தொழிலாளா் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு அவா்களை பணியமா்த்த வேண்டும்.
தற்போது பணியாற்றி வரும் அனைத்து வெளிமாநில தொழிலாளா்களின் விவரங்களையும், எந்தவித விடுபாடின்றி முழுமையாக ஒரு மாத காலத்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்ட நடவடிக்கைகளை தவிா்க்கும் பொருட்டு அனைத்து வெளிமாநில தொழிலாளா்களையும் பதிவு செய்வது அவசியமாகும். கோழிப் பண்ணை உரிமையாளா்கள் தங்களது பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த தகவலை நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், மோகனூா், பரமத்தி வேலூா் வட்டம் 88380-40453, ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், 90424-88228, திருச்செங்கோடு 94442-22461, குமாரபாளையம், சங்ககிரி- 88836-33363 ஆகிய எண்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.