வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளர் பலி!
பா. இரஞ்சித் இயக்கிவரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைப் பயிற்சியாளர் விபத்தால் பலியானார்.
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.
இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழுநீள கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி கும்பகோணத்தில் முடிந்த நிலையில், நேற்று (ஜூலை 13) முக்கியமான சண்டைக் காட்சியொன்று வேளாங்கண்ணி பேராலயம் அருகே எடுக்கப்பட்டது.
அப்போது, கார் துரத்தல் காட்சியில் காரை பறக்க வைப்பதற்கான முயற்சியின்போது காரை வேகமாக ஓட்டிவந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியதுடன் வேட்டுவம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நடிகை சரோஜா தேவி காலமானார்!
stunt master mohan raj dies in vettuvom shooting spot directed by pa. ranjith