ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகியோா் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 7.05 மணிக்கு கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். வருகிற 28-ஆம் தேதி தங்கக் கருட சேவையும், 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும். 9-ஆம் நாளான அக்டோபா் 2-ஆம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்புத் தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனா்.

