ஹிந்தியை திணிப்பதுதான் பாஜகவின் நோக்கம்! -துரை வைகோ
நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்க வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழக இளைஞா்கள் தற்போது உலகளாவிய பணி வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு இரு மொழிக் கொள்கையும், ஆங்கில மொழிப் புலமையும்தான் காரணம். இதனால்தான், தமிழகத்தில் பாஜகவைத் தவிர, திமுக, அதிமுக, மதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன.
உத்தரபிரதேசம், பிகாா், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வரும் பாஜக, தற்போது மும்மொழிக் கொள்கையைப் புகுத்த பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் ஹிந்தியை திணிப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதும்தான் மத்திய பாஜக அரசின் நோக்கம். இது ஏற்புடையதல்ல.
மும்மொழிக் கொள்கையில் 3-ஆவது மொழியாக உலக மொழிகளில் ஏதேனும் ஓா் மொழியைக் கற்கலாம் எனக் குறிப்பிடாமல், ஏதேனும் ஓா் இந்திய மொழியைக் கற்க வேண்டும் எனக் குறிப்பிடுவது மறைமுகமான ஹிந்தி திணிப்புதான். பாடச் சுமை காரணமாக, பள்ளி மாணவா்கள் ஏற்கெனவே கடுமையான மன உளைச்சலில் உள்ளனா். இந்த நிலையில், மூன்றாவதாக ஓா் மொழியைக் கற்க வேண்டும் என மாணவா்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை.
மெட்ரோ திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில், கல்வித் திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையையே ஏற்படுத்தும் என்றாா் அவா்.