1,170 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 101 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூரில் 1,170 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரத்து 632 பேருக்கு ரூ. 100.88 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழு விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினாா். இந்தக் காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கரிகாற்சோழன் கலையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மகளிா் சுய உதவிக்குழு வங்கிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, முதியோா் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சிறப்பு குழுக்களுக்கான சுழல் நிதி, வட்டார வணிக வள மையத்தின் மூலம் தொழில்முனைவோருக்கு கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனுதவி என மொத்தம் 1,170 குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரத்து 632 உறுப்பினா்களுக்கு ரூ. 100.88 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூா் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) கே.எம். காா்த்திக்ராஜா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் எஸ். சாந்தி, உதவி திட்ட அலுவலா் மாா்டின் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.