மே.இ.தீ. அபார பந்துவீச்சு: ஆஸி. 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்!
11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!
இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
”அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.
இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது.” என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவின் 11 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”கடந்த 11 ஆண்டுகள் 30 நாள்களில் இந்திய ஜனநாயகமானது திட்டமிடப்பட்ட மற்றும் ஆபத்தான 5 அடுக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது அறிவிக்கப்படாத அவசரநிலை@11.
1. அரசியலமைப்பின் மீதான தாக்குதல்கள்
2024 மக்களவைத் தேர்தலின்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அம்பேத்கரின் மரபை அழிக்கவும் 400 தொகுதிகள் வெற்றியை பிரதமர் நாடினார். ஆனால், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியைப் பாதுகாக்க மக்கள் வாக்களித்தனர்.
2. நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்துதல்
நாடாளுமன்ற விதிமுறைகளை மோடி அரசாங்கம் தொடர்ந்து துண்டாடி வருகிறது. பொது பிரச்னைகளை எழுப்பிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை பற்றி விவாதிக்க அரசு மறுத்துவிட்டது. முக்கிய சட்டங்கள் புல்டோசர்களால் சூறையாடப்படுகின்றன.
3. அரசியலமைப்பு அமைப்புகளின் சுயாட்சி அரித்தல்
சிஏஜி பொருத்தமற்றதாகிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நேர்மை சமரசம் செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் நேர்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தல் நேரங்களும் கட்டங்களும் ஆளும் கட்சிக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டன. பிரதமர் மற்றும் மூத்த பாஜக தலைவர்களின் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்து வருகிறது.
4. மத்திய - மாநில உறவுகளை அழித்தது
எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக பண பலத்தைப் பயன்படுத்தியது, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மசோதாக்களை முடக்கவும், பல்கலைக்கழக நியமனங்களில் தலையிடவும் ஆளுநர் பதவி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மாநிலங்களின் உரிமையான வருவாய் பங்கைப் பறித்து நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
5. நீதித்துறைக்கு சேதம் விளைவித்தல்
நீதித்துறைக்கு தனிக் கொள்கைகள் உள்ளன. ஆனால், பதவி உயர்வுகளில் தாமதம், இடமாற்றங்கள், வளைந்து கொடுக்கும் நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பிந்தைய பதவிகள் என அச்சுறுத்தல்கள் அளிக்கப்படுகிறது.
மேலும், வரி பயங்கரவாதம், வணிக மற்றும் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பது, அரசுக்கு எதிரான ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு, பத்திரிகையாளர்கள் கைது, செய்தி நிறுவனங்களுக்கு மிரட்டல் போன்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைத் துன்புறுத்தவும் அவதூறு பரப்பவும் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மற்றும் வருமான வரித் துறை போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாஜகவுக்காக ரூ. 8,000 கோடி தேர்தல் பத்திரங்களை சட்டவிரோதமாக வசூலிப்பதற்கு புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. கட்சி மாறி பாஜகவில் சேருபவர்கள் தானாகவே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பிடியில் இருந்து தப்பிக்கிறார்கள்.
போராடும் விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என்றும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்பவர்கள் நகர்ப்புற நக்சல்கள் என்றும் முத்திரை குத்தப்படுகிறது.
மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் மகிமைப்படுத்தப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.