தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண...
1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
கடந்த 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 275 ஆண்டுகளுக்குப் பின், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்குகிறது பத்மநாபசுவாமி கோயில். இது உலகப் புகழ்பெற்ற கோயிலும் ஆகும். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7.40 முதல் 8.40 மணிக்குள் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி பிரசாதசுத்தி, 3 ஆம் தேதி பிராயசித்த ஹோம கலசம், 5 ஆம் தேதி சாந்தி ஹோம கலசம், 6 ஆம் தேதி திரவிய திவ்ய கலசமும் நடைபெற்றது.
இன்று அதிகாலை பிரதிஷ்டா பூதபலி நடைபெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு வில்வமங்கலம் சாமியாா் மற்றும் மூத்த போற்றிமாா் தலைமையில் நடைபெற்றது.
இன்று அதிகாலை 3.30 முதல் 4.45 மணி வரையும், காலை 6.30 முதல் 6.45மணி வரையும் மட்டும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டது.
பின்னா் குடமுழுக்கு நிறைவடைந்த பின்னா் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே போல் மாலை 4.30 முதல் 6 மணிவரை மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1750ஆம் ஆண்டு..
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த 1750 ஆம் ஆண்டில் மாா்த்தாண்ட வா்மா மகாராஜா காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
கோயில் கோபுரத்தில் உள்ள 3 தங்க கலசங்களில் கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குடும்பத்தினா் விளைவித்த 150 கிலோ நவரை நெல் தானியங்கள் நிரப்பப்பட்டு உள்ளது என்று ராஜ குடும்ப பிரதிநிதி ஆதித்யவா்மா தெரிவித்தார்.