'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத...
2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!
மும்பையிலுள்ள பிரபல் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை பாந்திரா காவல் நிலையத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில், கடந்த மே 20 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அத்துமீறி நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு பாந்திரா பகுதியிலுள்ள கேலக்ஸி அபார்ட்மண்ட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தினுள், சல்மான் கானுக்குச் சொந்தமான வீடொன்று உள்ளது. அங்குதான், அவர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மே 20 ஆம் தேதியன்று காலை, ஜித்தேந்திரா குமார் சிங் (வயது 23) என்ற நபர், சல்மான் கானின் வீட்டைச் சுற்றி வந்துள்ளார்.
அப்போது, அங்கு சல்மான் கானின் பாதுகாப்பிறகாகப் பணியமர்த்தப்பட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் ஜித்தேந்திராவை அங்கிருந்து கிளம்பச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தனது செல்போனை கீழே வீசி உடைத்துள்ளார்.
பின்னர், அன்று மாலை அவர், அதே கட்டடத்தில் வசிக்கும் மற்றொரு நபருக்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உள்ளே நுழைய முயன்றபோது, போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதனால், அவரை உடனடியாக பாந்திரா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், சல்மான் கானை பார்க்கவே அவர் அவ்வாறு நுழைந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அவர் எப்படி அந்த வாகனத்தினுள் ஏறினார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதேபோல், கடந்த மே 21 ஆம் தேதியன்று, மற்றொரு பெண் உரிய அனுமதியின்றி அந்தக் கட்டடத்தினுள் நுழைந்து, சல்மான் கானின் வீட்டின் வாசல் வரைச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஜித்தேந்திரா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அப்பெண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: சண்டையை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!