20 நாள்கள் பிணமாக நடித்த நாயகி!
இளம் நடிகையொருவர் 20 நாள்கள் பிணமாக நடித்துள்ளார்.
சினிமாவில் பிணமாக நடிக்க வேண்டும் என காட்சிகளை விளக்கினாலே பல நடிகர்களும் தயக்கத்தைத் தெரிவிப்பார்கள். காரணம், இறப்பதுபோன்ற காட்சிகள் இருந்தால் கதாபாத்திரம் பலமாக இருக்காது என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு.
அதுவும், படம் முழுக்க பிணமாகத்தான் நடிக்க வேண்டும் என்றால் ஒப்புக்கொள்வார்களா? தமிழில், ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடிகர் நாகேஷ் அப்படி நடித்தார்.
அதன்பின், ஏலே படத்தில் சமுத்திரக்கனி பெரும்பான்மையான காட்சிகளில் பிணமாக நடித்து பாராட்டுகளையும் பெற்றார்.
இதையும் படிக்க: 'என்னப்பா இப்படி எழுதியிருக்க...’ டிராகன் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!
இந்த வரிசையில், தற்போது நாயகி ஒருவர் இணைந்துள்ளார். வெள்ளிக்கிழமை (மார்ச் 7) வெளியாகும் எமகாதமி படத்தின் நாயகியான ரூபா கொடுவாயூர் இப்படத்திற்காக 20 நாள்கள் பிணமாக நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தைச் சேர்ந்த ரூபா தெலுங்கில் ‘உமா மகேஸ்வரா உக்ர ரூபசயா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி சிறந்த நடிகைக்கான சைமா விருதை வென்றவர்.
எமகாதகி படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்துப்போக உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் பிணமாக நடித்ததற்குப் பின் அக்கதாபாத்திரத்தின் போராட்டமான வாழ்க்கையும் பேசப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.