``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்
வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்டம்வாரியாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இரண்டு நாள்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே நேற்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
`வேளாண்மை - உழவர் நலத்துறை'
இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு உணவுப் பொருள்கள் கிடைத்து உடல் வலிமையோடு வாழ்கிறார்கள்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் வேலையாக வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று, ‘வேளாண்மை-உழவர் நலத்துறை’ என்று பெயரை மாற்றினோம். பெயர் மாற்றத்திற்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டு வரலாற்றில், முதல்முறையாக திமுக ஆட்சியில்தான் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை ஐந்து முறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில், உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்டி உள்ளது. 2020-21-இல் ஹெக்டேருக்கு 2,235 கிலோவாக இருந்த உணவு தானிய பயிர்களின் உற்பத்தித் திறன் 2024-25-இல் 2,871 கிலோவாக அதிகரித்துள்ளது.
கூட்டுறவுத் துறை மூலம் ரூ.62,352 கோடி பயிர்க்கடனும், 81 லட்சம் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடனும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு 26 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளார்கள்.

இலவச வேளாண் மின் இணைப்புகள்
தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரம் இணைப்புகள் ரூ.2,184 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்திற்கு மட்டும் இதுவரை ரூ.26,223 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை
மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.105, பிற ரகங்களுக்கு ரூ.130 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான ஒரு டன்னுக்கு ரூ.3,151 ரூபாய்க்கு மேல், ரூ.349 சிறப்பு ஊக்கத் தொகையாக தமிழக வேளாண் துறை வழங்குகிறது.
அகில இந்திய அளவில் பயிர் உற்பத்தித் திறனில், சிறுதானியங்கள், கேழ்வரகு, எள் மற்றும் துவரையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாவது இடமும், குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
கிராமங்களின் வளர்ச்சி
கிராமங்களின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றுதான் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
நகரங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மொத்தம் இருக்கும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிப்பதை ஊக்கப்படுத்தும் இந்த திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில், 21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,630 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,720 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் திட்டங்கள்
மதுரை மல்லிகைக்கான இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொகுப்பு, கறிவேப்பிலைத் தொகுப்பு, தென்னை வேர்வாடல் நோய்மீட்புத் திட்டம், மிளகாய் மண்டலம் என்று ஏராளமான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உழவர் சந்தை
கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட 125 உழவர் சந்தைகளை புதுப்பித்து, 14 புதிய உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டை விட 25 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக 2024-25-ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு ஈரோடு - திருப்பூர் - கோவை மாவட்டங்களில் இருக்கும் ஆயிரத்து 45 ஏரிகள் மற்றும் குளங்கள் வளம் பெற்றுள்ளன.
கடைமடைக்கும் பாசன நீர் கிடைக்கும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, தேவையான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய்கள் ரூ.514 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
8,579 விவசாயிகளுக்கு இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில், ஆயிரம் ரூபாயாக இருந்த முதியோர் ஓய்வூதியத் தொகை 2023-ஆம் ஆண்டு முதல் 1,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்" என்றார்.

200 அரங்குகள், கருத்தரங்குகள்:
கண்காட்சியில் உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், வருமானத்தைப் பெருக்க வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், செயல் விளக்கங்கள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள், தொழில்நுட்பங்கள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன், பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டபலன் முன்பதிவுகள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய ரகங்களைப் பரவலாக்குதல் ஆகியவை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பபிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, சர்க்கரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தினர்.
நுண்ணீர்ப்பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் அரங்கங்களை அமைத்துள்ளன. மேலும், பயிர்களின் புதிய ரக விதைகள், காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளின் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்ட உரக்கலவைகள், உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் நவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனையும் செய்யப்படுகின்றன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் அமைப்புகள் போன்ற நிறுவனங்களும் தங்களது தரமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதுடன் விற்பனையும் செய்து வருகின்றன.
வேளாண்மை இயந்திரமயமாக்குதலில் உள்ள சவால்களும், தீர்வுகளும், மண்வளம் காக்கும் உயிர்ம வேளாண்மை, காலநிலை மாற்றங்களைத் தாங்கவல்ல வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், உயர்விளைச்சல் கரும்பும் உன்னத பலன்களும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிமுறைகள், வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், இடைத்தரகரில்லா வேளாண் சந்தை, மின்னணு சந்தை, நஞ்சில்லா வாழை, கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உற்பத்திக்கான பூச்சி நோய் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கள் நடைபெறவுள்ளன.
மேலும், அடுத்த தலைமுறைக்கான தோட்டக்கலைப் பண்ணையம், மகத்துவ மஞ்சள் சாகுபடி, வளம் தரும் வாழை சாகுபடி, தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல், வேளாண் காடுகள் மூலம் வருமானம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பம் போன்ற நவீன தலைப்புகளில் விஞ்ஞானிகள், அனுபவமிக்க வேளாண் பெருமக்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்குகளும் புதன், வியாழக்கிழமை (ஜூன் 11, 12) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்