MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்
புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்கு சர்வே எண். 302/1, ஆவுடையார் கோவில் வட்டம் என்ற இடத்தில், அரசு புஞ்சை தரிசு நிலம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 1.8.2019 அன்று நிலமாற்றம் செய்யப்பட்டு இந்த காவல் நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 27.1.2025 தேதியிட்ட அரசாணை (நிலை) எண். 43-இன் படி ரூ.2.59 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டிடம் கட்டும் பணி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கழகத்தால் வருகின்ற மே மாதம் தொடங்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் கட்டி முடிக்கப்படும்.
சட்டபேரவை உறுப்பினர் கணபதி கேள்வி
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் அயம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 1 லட்சத்து 16 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது.
இந்த ஊராட்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய அலுவலகமும், மத்திய போதை தடுப்பு தலைமையகமும் மற்றும் மத்திய அரசின் உணவுக் கழகத்தின் தலைமையகம், ஆசியாவிலேயே மிகப் பெரிய வீட்டு வசதி திட்டமும் இங்கு தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இந்த 1 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு முன் வருமா? பேரவைத் தலைவர் மூலமாக, முதல்வரை கேட்டு அமைகிறேன். நன்றி.
தமிழ்நாடு முதல்வரின் பதில்
சென்னை புறநகர் மாவட்டம் அயம்பாக்கம் பகுதியைச் சார்ந்த புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்க வரையறுக்கப்பட்ட அளவுகோலின் படி 25 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் உள்ளன.
அதாவது கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அம்பத்தூர், மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆவடி, வடக்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் செங்குன்றம், தெற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தமல்லி ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து மற்றும் மீட்புப் பணி அழைப்புகள் அருகிலுள்ள மேற்கண்ட 4 தீயணைப்பு நிலையங்களைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஊர்திகளை கொண்டு மேற்கொள்ள இயலும் என்பதால், அயம்பாக்கம் பகுதியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கும் நிலை தற்போது எழவில்லை.
அது குறித்து பேசவேண்டும் என்று கையைத் தூக்கி உயர்த்திக்காட்டி பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு சில புள்ளிவிவரங்களை நான் சொல்ல விரும்புகிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்ற 2021-லிருந்து தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அந்த 23 நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் வந்திருக்கின்றன என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை கனிவுடன் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கக்கூடிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை இந்த அவையிலே தாக்கல் செய்யப்படுகின்ற நேரத்தில் நிச்சயமாக நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகளும் வரும் என்பதையும் நான் உறுதியோடு தெரிவித்து அமைகிறேன்” என்றார்.