Anurag: "என்னைத் தொந்தரவு செய்த அந்த நபர்; அதிலிருந்து மும்பையில் இருப்பதில்லை" - அனுராக் காஷ்யப்
`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப்.
நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார். கொஞ்ச காலமாகவே அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, பாலிவுட் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில்கூட பாலிவுட்டில் பிறக்காமல், தமிழ்நாடு, கேரளா எனத் தென்னிந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும் என்று கூறியிருந்தார் .

இந்நிலையில் தற்போது மும்பையில் குடியிருப்பது தொந்தரவாக இருப்பதாக மனம் திறந்திருக்கிறார். இது பற்றிப் பேசியிருக்கும் அவர், "வேலைகள் இல்லாத நேரம் நான் தென்னிந்தியாவிற்குச் சென்றுவிடுவேன். மும்பையிலிருந்தால் என் நேரம் வீணாக்கப் போய்விடுகிறது.
தேவையில்லாத விஷயங்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. எல்லாருக்கும் மும்பையில் இருக்கும் என் வீட்டின் முகவரி தெரிந்திருக்கிறது. நான் எல்லோரையும் இயல்பாகச் சந்திப்பவன். அதனாலேயே வாய்ப்புக் கேட்டு என் வீட்டின் முன் வரிசையில் நின்று விடுகிறார்கள் .

ஒருமுறை ஒரு இளைஞர் என் வீட்டு வாசலில் நின்று கொண்டு, 'என் தந்தை இறந்துவிட்டார். எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுங்கள்' என்று தொந்தரவு செய்தார். அந்த நேரத்தில் நான் ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலிருந்தேன். எவ்வளவு பொறுமையாக எடுத்துச் சொல்லியும் அவர் அங்கிருந்து நகரவில்லை. ஒருகட்டத்தில் அவர் என்னை மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வாய்ப்புக் கேட்டு அலுவலகம் வரலாம், வீட்டில் வந்து இப்படி தொந்தரவு செய்வது சரியில்லை. அதனாலேயே நான் எப்போதும் என் மும்பை வீட்டில் இருப்பதில்லை. என் மும்பை வீட்டிலும் முழுக்க முழுக்க சிசிடிவி கண்காணிப்பில் வைத்திருப்பேன்" என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
