Budget 2025: ``அணுசக்தி மின் உற்பத்தியில் தனியாரை அனுமதிப்பதா..." - பூவுலகின் நண்பர்கள் கண்டனம்
பாஜக 3.0 அரசின் முதல் முழு மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட்டான இதில், ``அணுமின் சக்தி தயாரிப்பதற்கு வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். 2047-ம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களுடனும் மேற்கொள்ளப்படும்." என்ற இடம்பெற்றிருந்தது.
இந்த அறிவிப்பைத்தொடர்ந்து, ``கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவைசெய்வதற்காக 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது." என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், ``2025 பட்ஜெட் ஆபத்துகள்" என்று `பூவுலகின் நண்பர்கள்' சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், ``அணு மின்னுற்பத்தியில் தனியாரை அனுமதிப்பதும், 2047-க்குள் 100 GW அணு மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதும் கண்டனத்துக்குரியது. இந்த அறிவிப்பு சாத்தியமில்லை என்பதைத் தாண்டி அணு மின்சக்தி மிகவும் ஆபத்தானதாகும். அணு மின்சக்தி மிகவும் தூய்மையானது என்பது பொய்யான வாதமாகும்." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அணுசக்தி மின்சார உற்பத்தி குறித்தும், அதற்கான ஒப்பந்தங்களைத் தனியாரிடம் மேற்கொள்வது குறித்தும் உங்களின் கருத்துகளைக் கமென்ட்டில் பதிவிடவும்.