CSK vs RCB : 'பெங்களூருவுக்கு எதிராக பதிரனா ஆடுவாரா?' - ப்ளெம்மிங் கொடுத்த அப்டேட்
'சென்னை Vs பெங்களூரு'
18 வது ஐ.பி.எல் சீசனில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பாக இன்று இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் வந்திருந்தார். அவர் பேசிய முக்கியமான விஷயங்கள் இங்கே.

"ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்க வேண்டும் என்பது அவர் எடுத்த முடிவா அல்லது அணி நிர்வாகம் எடுத்த முடிவா?"
"இப்படியான முடிவுகளெல்லாம் எல்லாருடனும் கலந்து பேசி கேப்டன் எடுக்கும் முடிவே. நாங்கள் எல்லாவற்றையும் யோசித்துதான் ஏல அரங்கிலேயே மூன்று சீசன்களுக்கான அணியை எடுத்திருக்கிறோம்.
"பதிரனாவின் காயத்தைப் பற்றிய அப்டேட்?"
"பதிரனா வேகமாக குணமாகி வருகிறார்."

"மிடில் ஆர்டரில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?"
"நாங்கள் ஒரே ஒரு போட்டியில்தான் ஆடியிருக்கிறோம். அந்தப் போட்டியையும் வென்றிருக்கிறோம். அதனால் பெரிதாக மாற்றங்கள் இருக்காது."
"பெங்களூரு அணி கோலியையும் ரஜத் பட்டிதரையும் அதிகம் சார்ந்திருக்கிறதோ?"
"ஒரு போட்டிதான் முடிந்திருக்கிறது. இப்போது எதையும் சொல்ல முடியாது. சீசன் செல்ல செல்ல நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இரண்டு அணிகளும் கடந்த சீசனில் இருந்ததை விட வேறாக இருக்கின்றன. அதனால் கடந்த கால ரெக்கார்டுகளை பற்றி யோசிக்கவில்லை. கோலி அந்த அணியின் மிகப்பெரிய வீரர்தான்."
மேலும் பேசியவர், 'ரச்சின் ரவீந்திரா கடந்த ஓராண்டில் நிறையவே வளர்ந்திருக்கிறார். மும்பைக்கு எதிராக அவர் ஆடியது அவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்று.' என்றார்.