Mohammed Shami: ஷமி செய்தது பாவமா... இஸ்லாமிய அமைப்பின் தலைவருக்கு எதிராக கிளம்பும் வாதங்கள்!
இஸ்லாம் மத காலண்டரில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலைக்கெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மத வழக்கத்தின்படி நோன்பு இருக்கின்றனர். அதன்படி, தற்போது மார்ச் 1-ம் தேதி முதல் ரமலான் தொடங்கிவிட்டதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், துபாயில் மார்ச் 2-ம் தேதி நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் முகமது ஷமி குளிர்பானம் பருகும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஷமி செய்தது பாவமா?
இந்த விவகாரத்தில், அனைத்திந்திய முஸ்லீம் ஜமாத்தின் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வி, ``புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஒரு கடமை. யாராவது வேண்டுமென்றே நோன்பு இருப்பதைத் தவிர்த்தால் அவர்கள் பாவம் செய்தவராவார். கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இப்போது நோன்பு இருக்கவில்லை. இதன்மூலம் அவர் பாவம் செய்துவிட்டார். ஷரீஅத்தின் படி ஷமி பாவி, குற்றவாளி" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, ஷமியின் செயலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சிலர் அவருக்கெதிராக கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கினர். அதேசமயம், `ஷமி நாட்டுக்காக விளையாடுகிறார். பயணத்தில் இருப்பவர்கள் நோன்பு இருப்பதைத் தவிர்க்கலாம். அதில் தவறில்லை என்று இஸ்லாம் கூறுகிறது' என ஷமிக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஷமியை விமர்சித்த மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேயில்வியைப் போல இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஷமியின் செயலில் தவறில்லை என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

`சுற்றுப்பயணத்தில் இருப்பதால்...’
ஊடகத்திடம் பேசிய அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபிராங்கி மஹ்லி, ``இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது கட்டாயம் என்றாலும், பயணத்தில் இருப்பர்வகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது ஷமியைப் பொறுத்தவரை, அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், நோன்பைத் தவிர்க்க அவருக்கு சாய்ஸ் இருக்கிறது. எனவே, அவரைக் கேள்விகேட்க யாருக்கும் உரிமை இல்லை." என்று கூறினார்.
இவரைப்போலவே, ஷியா மதகுரு மௌலானா யாசூப் அப்பாஸ், ``இதுவொரு மலிவான விளம்பரம். ஷமியின் தனிப்பட்ட விருப்பத்தை பொதுப் பிரச்னையாக மாற்றக் கூடாது." என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லியின் மோதி மசூதியின் இமாம் மௌலானா அர்ஷாத், ``ஷமியைக் கேள்வி கேட்பவர்களுக்கு இஸ்லாமோ, குரானோ புரியவில்லை. ஒரு பயணி நோன்பைத் தவிர்க்க இஸ்லாம் அனுமதிக்கிறது." என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார், ``நாட்டுக்காக விளையாடும்போது, நோன்பு இருப்பது ஆட்டத்தில் தனது செயல்திறனைப் பாதிக்கும் என்று ஷமி உணர்ந்தால், அவரால் தூங்கவே முடியாது. அவர், இந்திய அணியைப் பலமுறை வெற்றிபெறச் செய்தவர். எனவே, விளையாட்டில் மதம் கூடாது. இன்று நீங்கள் எந்தவொரு இஸ்லாமியரிடம் கேட்டாலும், ஷமியை நினைத்துப் பெருமைப்படுவதாக அவர் கூறுவார்." என்று ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
