Virat Kohli : ``நண்பர் வில்லியம்சனை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது; ஆனாலும்..." - கோலி நெகிழ்ச்சி
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. வெற்றிக்குப் பிறகு விராட் கோலி நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

கோலி பேசியதாவது, ``ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு மீண்டு வந்து பெரிய தொடரை வெல்ல வேண்டும் என நினைத்தோம். இளம் வீரர்களோடு இணைந்து அதை சாதித்ததில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான வெற்றிகள்தான் நம்மை ஓட வைக்கும். கடந்த சில வருடங்களாகக் கோப்பைகளை வெல்லாமல் இருந்தோம். ஒரு அணியாக சிறப்பாகச் செயல்பட்டு இப்போது கோப்பைகளை வெல்வதில் மகிழ்ச்சி. இளம் வீரர்களுக்கு என்னால் முடிந்தளவுக்கு என்னுடைய அனுபவத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன். அடுத்த 8-10 ஆண்டுகளுக்கு அணியை முன் நகர்த்தி செல்லும் அளவுக்கு இளம் வீரர்கள் திறனோடு இருக்கிறார்கள்.
இந்திய அணி நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து அணி எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடிய அணிதான்.

என் நண்பர் கேன் வில்லியம்சன் தோல்வியடைந்து நிற்பது வருத்தமளிக்கிறது. ஆனால், நியூசிலாந்து அணி பெரிய போட்டிகளில் வென்ற போது நானும் அப்படியொரு நிலையில் இருந்திருக்கிறேன். (இலகுவான தொனியில்..) என்றார்.