4 நாள் ஏற்றத்திற்கு பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநில, போபாலில் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில்வே மேம்பாலம் ரூ.18 கோடியில் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலம் அருகில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலம் கட்டுவதற்கு போதிய நிலம் இல்லாமல் இருந்தது. பாலம் கட்டும் போதே அதன் வடிவமைப்பு மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. பாலம் எந்த விதவளைவும் இல்லாமல் திடீரென செங்குத்தாக திரும்பும் விதமாக கட்டியுள்ளனர்.

இது குறித்த விமர்சனங்கள் வந்தபோது, எங்களுக்கு இப்படி கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று தங்களது மேம்பால டிசைனை பொறியாளர்கள் நியாயப்படுத்தினர்.
அருகில் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பதாலும், போதிய நிலம் இல்லாததாலும் இப்படித்தான் கட்டமுடியும் என்று பொறியாளர்களும், கட்டுமானநிறுவனமும் தெரிவித்தது.
பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்படும் நிலை வந்தபோது பாலத்தை பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்தனர். இப்பாலத்தில் வாகனங்கள் சென்றால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பாலத்தை போக்குவரத்திற்கு திறக்காமல் மாநில அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
இது குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் மாநில அரசு தலைமை பொறியாளர்கள் இரண்டு பேர் உள்பட 7 பொறியாளர்கள் உடனே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அதோடு இந்த மேம்பாலத்தை வடிவமைத்து கொடுத்த நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மாநில அரசு தடை விதித்தது. இது குறித்து மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தலைமை பொறியாளர் வி.டி.சர்மா கூறுகையில், அருகில் வேறு நிலம் இல்லை. எனவே வேறு வழியில்லாமல் அப்படி கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.
தற்போது பாலத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்த பிறகுதான் பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.