Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி பாதிக்கும்? Explained
நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என வலுவாக சந்தேகிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லையை மூடுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் சிந்து நீர் ஒப்பந்தம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதை ரத்து செய்ததால் பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படப் போகிறது. இந்த ஒப்பந்தத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்.

சிந்து நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் நதிகளின் நீரை பகிர்ந்து பயன்படுத்தி கொள்வதற்கான ஒப்பந்தம் தான் சிந்து நீர் ஒப்பந்தம்.
இது 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் சட்டென கையெழுத்து ஆகி விடவில்லை. ஒன்பது ஆண்டுகள் பேச்சுவார்த்தை, உலக வங்கி மத்தியஸ்தம் போன்றவற்றிற்கு பின்பே கையெழுத்தானது.
இதில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு மற்றும் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் ஆயூப் கானும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி...
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவின் கட்டுப்பாட்டில் கிழக்கு ஆறுகளான ராவி, பீஸ், சட்லஜ் நதிகள் இருக்கும்.
மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும்.
இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவிற்கு ஏற்ப இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவசாயம், குடிநீர், தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த அனைத்து நதிகளின் நீரும் பாகிஸ்தானுக்கு மிக மிக முக்கியம். இந்தத் நதிகளின் நீரை வைத்து தான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது.
சிந்து நதி நீரில் 80 சதவிகிதத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் 20 சதவிகிதம் இந்தியாவுக்கு என்று ஒப்பந்தத்தில் முடிவுகள் எட்டப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் சீனா பங்கேற்கவில்லை. இந்தியாவின் வழியாக சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், சட்லஜ், ராவி, பீஸ் ஆகியவைப் பிரிந்து பாகிஸ்தானுக்குச் சென்று அதே சிந்து நதியில் மீண்டும் கலக்கிறது.
ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீரை போக்குவரத்து, பாசனத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ராவி, சத்லஜ், பீஸ் நதிகளின் நீர் இந்தியாவுக்கு எனவும் முடிவு செய்யப்பட்டது,
இந்தியாவுக்கு இதில் 20 சதவிகித உரிமை இருந்தாலும் இன்று வரை அதன் மீதான தனது உரிமையை மத்தியில் இருந்த எந்த அரசும் கேட்டுப்பெற்றது இல்லை. பாகிஸ்தான் மட்டுமே பெரும் அளவிலான நீரை உபயோகப்படுத்திக்கொண்டது.

எதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியாக ஓடும் இந்த நதிகளின் நீரை 1948-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல முடியாதப்படி தடுத்துவிட்டது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது.
அது சம்பந்தமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தான் சிந்து நீர் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்த ரத்து பாகிஸ்தானை எப்படி பாதிக்கும்?
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து நதிகளும் பாகிஸ்தானின் மிக முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும். இந்த ஒப்பந்த ரத்தினால் பாகிஸ்தானை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளன.
பஞ்சாப் மற்றும் சிந்து பிராந்தியங்களில் செய்யப்படும் விவசாயத்திற்கு 80 சதவிகித நீர் ஆதாரம் இந்த நதிகள் தான். விவசாயம் தொடங்கி குடிநீர் வரை நீர் சம்பந்தமான அனைத்தும் பயங்கரமாக பாதிக்கப்படும்.
பாகிஸ்தானில் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைப்பாடு, விவசாய நிலங்களில் உப்புத்தன்மை, நீர் பஞ்சம் போன்றவை தலைவிரித்து ஆடுகிறது. இந்த நேரத்தில் இந்த நதிகளின் நீரும் நிறுத்தப்படுவது பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக விழும்.

இந்த ஒப்பந்தத்தின் ரத்து பாகிஸ்தானின் விவசாயத்திற்கு தான் பேரிடியாக இறங்கி உள்ளது. பாகிஸ்தானின் தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு 23 சதவிகிதம் ஆகும். ஆக, விவசாயம் பாதிக்கப்படும் போது, அது பாகிஸ்தான் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பாகிஸ்தானை பொறுத்தவரை நீர் தேவைக்கு மழையும் பெரிய அளவில் கைக்கொடுக்காது. காரணம், அவர்களிடம் தண்ணீர் சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதி கிடையாது. அவர்களிடம் இருக்கும் அணைகளிலும் போதிய கொள்ளளவு இல்லை.
ஆக, இந்த ஒப்பந்த ரத்து பாகிஸ்தானுக்கு பெரிய தத்தளிப்பை ஏற்படுத்த உள்ளது.!