110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கி...
Rajasekar: "இப்போ இருக்கிற சூழல்ல 10 ரூபாய் கிடைச்சாலும் பெருசு!" - ராஜசேகர் மனைவி தாரா
சின்னத்திரை நடிகர் மற்றும் இயக்குநர் ராஜசேகர் கடந்த 2019-ம் ஆண்டு இயற்கை எய்தினார். ராஜசேகர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு கடன் வாங்கி புதிய வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.
அவரின் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டிற்காக வாங்கிய கடனை ராஜசேகரின் மனைவி தாராவால் திருப்பிச் செலுத்த முடியாமல் போக, கடன் கொடுத்த வங்கி வீட்டை ஏலத்தில் விட முயற்சித்து வந்திருக்கிறது.

இது தொடர்பாக சமீபத்திய விகடன்.காம் பேட்டியில் ராஜசேகரின் மனைவி தாராவும் பேசியிருந்தார்.
இந்நிலையில், ராஜசேகர் தொடர்பாகவும், தற்போது அவர் சந்திக்கும் சிக்கல்கள் தொடர்பாகவும் பேசுவதற்கு சந்தித்தோம்.
ராஜசேகரின் மனைவி தாரா பேசுகையில், “சரியாக ‘கருத்தம்மா’ சீரியல் சமயத்துலதான் எனக்கும் ராஜசேகர் சாருக்கும் திருமணம் ஆச்சு. திருமணம் ஆகி 30 வருஷம் இருக்கும்.
அதுல 20 வருஷம் நாங்க ஹாரிங்டன் ரோட்டுலதான் குடியிருந்தோம். பிறகு, ஷூட்டிங்கிற்கு காலையில சீக்கிரமாகப் போக முடியலைனு வடபழனியில குடியேறினோம். அங்கையும் 5-6 வருஷம் இருந்தோம். எங்களோட வாழ்க்கை ரொம்பவே நல்லா இருந்தது.
எங்களை மாதிரியான சந்தோஷமான வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது. ராஜசேகர் சாரைத் திருமணம் பண்ணினது எனக்கு பெரிய கிஃப்ட். தவறாக எந்நாளும் நான் நினைக்க மாட்டேன். அவர் ரொம்ப தங்கமான மனுஷர்.

கொஞ்சம் கோபம் மட்டும்தான் வரும். அவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. ஷூட்டிங்ல இருந்து கிடைக்கிற பணத்தையும் எங்கிட்டதான் கொடுப்பாரு. ‘உனக்கு என்ன தேவையோ வாங்கிக்கோ’னு சொல்லி அதை எங்கிட்ட கொடுப்பாரு.
தினமும் 10 ரூபாய்க்காக எங்கிட்ட கேட்பாரு. அவர் காலையில பேப்பருக்காகத் தான் அதைக் கேட்பாரு. ஆனா, காலையில இருட்டுல போனால் கீழ எங்கையாவது விழுந்திடுவார்னு பயந்து, அவருக்கு எல்லாமே நான்தான் பண்ணுவேன்.
பிறகு, வடபழனி பகுதியில ஒரு ஃப்ளாட் வாங்கிடலாம்னு சொன்னாரு. கிடைக்கிற வருமானத்தை வச்சு லோன் கட்டிடலாம்னு சொன்னாரு.
அவர் ‘சத்யா’ சீரியல்ல நடிச்சிட்டு இருக்கிற சமயத்துல நெஞ்சு வலிக்குதுனு சொன்னாரு. அந்த நேரத்துல உடனடியாக ஆட்டோ பிடிச்சு விஜயா ஹாஸ்பிடல் போனோம். என்னுடைய நகையை அடமானம் வச்ச பணத்தின் உதவியாலதான் அவருக்கு மருத்துவச் செலவுகளைப் பார்த்தேன்.
அந்த நேரத்துல யாருமே வந்து அவரைப் பார்க்கலை. எங்கிட்ட இருந்த பணத்தை வச்சுதான் அவருக்கு அப்போ மருத்துவச் செலவுகளைப் பார்த்தேன். அந்த நேரத்துல ஒரு டைரக்டர் மட்டும் பணம் வாங்கியிருந்தோம்.
வேலூர்ல எனக்கு ஒரு வீடு இருக்கு. அந்த வீட்டை வச்சு அட்வான்ஸ் பணத்தை வாங்கினேன். எனக்கு இப்போ இருக்கிற சூழல்ல 10 ரூபாய் கிடைச்சாலும் பெருசு.

எனக்கு ஒரு டீ யாராவது வாங்கிக் கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கிக் குடிப்பேன். ராஜசேகர் வீடு வாங்கும்போது அவருக்கு வயசு 65. அந்த வயசுல ராஜசேகருக்குத் தான் நீங்க கடன் கொடுத்தீங்க.
தாராவாகிய எனக்கு நீங்க கடன் தரலை. இன்ஸூரன்ஸும் போட்டாங்க. அந்த இன்ஸூரன்ஸுக்கும் அவங்க பதில் சொல்லலை. கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு போலீஸ்லாம் வந்தாங்க.
4-ம் தேதி என்னுடைய பூனை ரெண்டும் செத்து போயிடுச்சு. நான் எங்க போவேன்? திரும்ப நான் வீட்டுக்கு வரும்போது என்னை உள்ள அனுமதிக்கக் கூடாதுனு சொல்லியிருக்காங்க,” என பல விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.