"கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு... ஓட்டுநரை காலணியால் அடித்த மேலாளரை கைதுசெய்க" -...
Thug Life: `கமல் சாரின் சிந்தனைகளுக்கு ரசிகன்; ஹெச்.வினோத் சாருக்கு நன்றி'- நடிகர் அர்ஜூன் சிதம்பரம்
கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது 'தக் லைஃப்'. படத்தில் ரங்கராய சக்திவேலுடன் உடன் வருபவர்களாக ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள், அர்ஜூன் சிதம்பரம் எனப் பலரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர்.
இந்தக் கேங்கில் ஒருவராக வரும் ஆர்ஜூன் சிதம்பரம் தன்னுடைய கலுவா கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து பக்காவாகப் பேலன்ஸ் செய்து நடித்திருந்தார்.

இதற்கு முன் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து நமக்குப் பெரிதளவில் பரிச்சயமானவர். மணி ரத்னம் இயக்கத்தில் ஏற்கெனவே, 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரகுணனாக நடித்திருந்தார். 'தக் லைஃப்' திரைப்படம் தொடர்பாகப் பேசுவதற்கு அவரைத் தொடர்பு கொண்டோம். 'தக் லைஃப்' கொடுத்த அனுபவம், 'நேர்கொண்ட பார்வை' திறந்து வைத்த சினிமா வாசல் எனப் பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.
"நான் இப்போ மகிழ்ச்சியின் உச்சத்துல இருக்கேன். 'தக் லைஃப்' மாதிரியான படத்துல நடிச்சதை நான் பெரும் சாதனையாகப் பார்க்கிறேன். 13 வருடமாக சினிமாவுல இருக்கேன். இந்த வாய்ப்பு நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர வைக்குது. இத்தனை வருஷமா நான் சினிமாவை இறுக்கமாகப் பிடிச்சிருக்கேன். சினிமாவும் என்னை இறுக்கமாகப் பிடிச்சிருக்கு." என்றபடி பேசத் தொடங்கினார்.
வரகுணன் கதாபாத்திரம்
பேசத் தொடங்கிய அவர், "நான் 7 வருஷமா மணி சார் படத்துல நடிக்கிறதுக்கு முயற்சி பண்ண்டி இருக்கேன். 'ஓ காதல் கண்மணி' படத்துல இருந்து முயற்சி பண்ணினேன். பிறகு, 'செக்கச் சிவந்த வானம்' படத்துல சிம்பு சார் பண்ண கதாபாத்திரத்துக்கு நான் ஆடிஷன்ல கலந்துகிட்டேன்.
அந்த வாய்ப்பு அப்போ கைகூடி வரல. அதுக்கப்புறம், 'பொன்னியின் செல்வன்' படத்துல பல கதாபாத்திரங்களுக்கும் நான் ஆடிஷன் செய்யப்பட்டேன். கடைசிலதான் எனக்கு வரகுணன் கதாபாத்திரம் கிடைச்சது.

'பொன்னியின் செல்வன்' முடிச்சதுக்குப் பிறகு மணி சார்கூட டச்லேயே இருந்தேன். இந்தப் படத்துல முதல்ல உதவி இயக்குநராக வர்றேன்னு சொல்லிதான் கேட்டேன். அப்போ மணி சார் 'டைரக்ஷன் கத்துக்கணும்னா ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணு'னு சொன்னாரு. 'தக் லைஃப்' படம் தொடங்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் படத்துக்குள்ள நான் வந்தேன்.
முக்கியமாக, அந்தக் கதாபாத்திரம் எவ்வளவு நேர்மையாக இருக்கும்னுதான் சொன்னாங்க. ரங்கராய சக்திவேல் மீதான நேர்மை, அமரன் உடனான நட்பு பத்தியும் சொன்னாங்க. என்னதான், ரங்கராய சக்திவேலுக்கு துரோகம் பண்ணினாலும் அவர் மீது வைத்த அதீத நேர்மை அவனை ஏதோச் செய்யும்.
கலுவா நேர்மையானவன்!
அந்தக் குற்றவுணர்ச்சியால்தான் இரண்டாம் பாதியில் கலுவா டிராமாவில் இருப்பது போலவே இருப்பார். இப்படியான விஷயங்களைதான் என்னுடைய கதாபாத்திரத்துக்கு என்கிட்ட சொன்னாங்க.
ஆனா, கலுவா நேர்மையானவன்! பலரும் சொன்னது போல, கண்டிப்பா இத்தனை நட்சத்திரங்களுடன் நடிக்கும்போது ஒரு தயக்கம் இருக்கும்தான்.
நான் கமல் சார்கூட நடிக்கும்போது ஒரு காட்சியில ஒரு வசனத்தையே விட்டுடேன். அப்படியான சமயங்கள்ல கமல் சார் எனக்கு இன்புட்ஸ் கொடுப்பாரு. படத்தின் இண்டர்வெல் காட்சி எடுக்கும்போதுதான் கமல் சார்கூட பேசுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.

மணி சாரைப் பார்த்துதான் பயம் வரும்!
நான் அவருடைய சினிமாக்களுக்கும் ரசிகன். அதுபோல, அவருடைய சிந்தனைகளுக்கும் நான் ரசிகன். 'அன்பே சிவம்', 'ஆளவந்தான்', 'வசூல் ராஜா' ஆகிய படங்கள் எனக்குள்ள உளவியல் ரீதியான தாக்கத்தையும் கொடுத்திருக்கு.
கமல் சார்கிட்டையும், சிம்பு சார்கிட்ட முதல் நாளே போய் அவங்களை எவ்வளவு பிடிக்கும்ங்கிற விஷயத்தைத் தெரிவிச்சுட்டேன். இதையெல்லாம் தாண்டி எனக்கு மணி சாரைப் பார்த்துதான் பயம் வரும்.
எனக்கு 'பொன்னியின் செல்வன்' படத்துலகூட பயம் இல்ல. அப்போ ஏன் எனக்கு பயம் வரலைனு தெரியல. இந்தப் படத்துக்கு எனக்கு இருந்தது.
நம்ம குருகிட்ட ஒரு மரியாதை கலந்த பயம் இருக்குமில்லையா, அதுதான்! ரெண்டு படம் பண்ணீட்டேன். ஹாட்ரிக்கா மூணாவது படம் பண்ணீடனும்னு ஆசையோடு இருக்கேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. ஆக்டர்ஸ் ஹாண்ட்புக்னு ஒரு விஷயம் இருக்கு. அதை மணி சார்தான் எனக்குக் கத்துக்கொடுத்தாரு.

அந்தக் கதாபாத்திரத்தின் பற்றி அனைத்து விஷயங்களையும் அந்தப் புக்குல நோட் பண்ணி வச்சுக்குனு சொல்லிக் கொடுத்தாரு.
அதுதான் அந்தக் கதாபாத்திரத்துக்குள்ள ஆழமாக இறங்குறதுக்கு உதவியாக இருந்தது." என்றவர், "இந்தப் படத்துல எனக்கு இன்னொரு முக்கியமான விஷயம் நாசர் சார்கூட வொர்க் பண்ணினதுதான்.
``நாசர் சார் தினமும் எனக்குக் கம்பனி கொடுப்பாரு. பாண்டிச்சேரில ஷூட் முடிச்சிட்டு என்னுடைய கார்ல நாசர் சார், பக்ஸ் அண்ணாலாம் வந்தது என்னைக்கும் நினைவுல வச்சிருப்பேன். நாசர் சார் ரொம்பவே அறிவார்ந்தவர்.
அதுபோல, ஃபன்னானவரும்கூட!" என்று சொன்ன அவர், "இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற எல்லா விஷயங்களுக்கும் காரணம் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம். அப்படத்தின் ஆதிக் கதாபாத்திரம்தான் என்னைப் பலருக்கும் கொண்டு போய் சேர்த்தது.

மணி சாரை நான் சந்திக்கிறதுக்கு காரணமும் ஒரு வகையில அந்தப் படம்தான். 'நேர்கொண்ட பார்வை' படத்துல நடிகை ஷர்தா ஶ்ரீநாதுக்கு பின்னணி பாடகி கிருத்திகா நெல்சன்தான் டப் பண்ணினாங்க.
அவங்க 'பொன்னியின் செல்வன்' படத்துல உதவி இயக்குநராகவும் பணியாற்றினாங்க. அவங்க மூலமாகதான் மணி சாரைச் சந்திச்சேன். என்னைக்கும் ஹெச்.வினோத் சாருக்கு நன்றி சொல்லுவேன்!" எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...