பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!
TVK : ஆர்வத்தோடு விஜய்; முட்டுக்கட்டையாக நிற்கும் `பவர்புல்' அணி? - தவெகவில் என்ன நடக்கிறது?
'பனையூர் அப்டேட்!'
மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என நடத்தி திடீர் பேசுபொருளாகி மறைந்து விடுகிறது தவெக. பிப்ரவரியில் ஆண்டு விழா, மார்ச்சில் பொதுக்குழுக் கூட்டம் என நடத்தி முடித்தவர்கள், இந்த மாத இறுதியில் பூத் கமிட்டி மாநாடை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாற்றுக்கட்சியினர் சிலர் தவெகவில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் விஜய்யை சுற்றியிருக்கும் ஒரு `பவர்புல்' டீம் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்பதாகவும் பனையூர் வட்டாரத்தில் அரசல் புரசலாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னணி என்ன?
சில மாதங்களுக்கு முன்பு, தமிழ் தேசியம் பேசும் ஒரு கட்சியின் முக்கிய பெண் நிர்வாகி ஒருவர் அந்தக் கட்சியில் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்து உள்ளூர் தவெக நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தகவல் தலைமைக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் வந்தால் நம் கட்சிக்கு பலம்தான். பெண்கள் மத்தியில் இன்னும் வலுப்பெறுவோம் என விஜய்யும் அந்த பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
'பவர்புல் அணியின் முட்டுக்கட்டை!'
எல்லாம் சுமுகமாக செல்ல, அந்த பெண் நிர்வாகிக்கும் விஜய்க்கும் சென்னையில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 'அந்த மீட்டிங்ல இருந்துதான் சிலரோட சுயரூபம் தெரிய வந்துச்சுங்க..' என்கின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள் சிலர். 'தலைவரை பார்க்க அந்த மாற்றுக்கட்சி நிர்வாகி வந்தாங்க. தலைவரை மீட் பண்றதுக்கு முன்னாடி அவருக்கு வியூகம் வகுத்து கொடுக்குற டீம் அவரோட ஒரு சிட்டிங் பேசியிருக்காங்க.

அப்போ முதல் கேள்வியே 'இப்போ நீங்க ஒரு கட்சியில இருக்குறீங்க. அங்க இருந்துக்கிட்டே இன்னொரு கட்சியில சேர பேசுறீங்க. அப்ப நீங்க இங்க இருந்துக்கிட்டு இன்னொரு கட்சியில பேசமாட்டீங்கன்னு என்ன உத்தரவாதம்?' என ஆரம்பத்திலேயே அவரை சங்கடப்படும் வகையில் கேள்வி கேட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் பேசிய விதமும் கேட்ட கேள்விகளுமே அந்த பெண் நிர்வாகிக்கு கட்சியில் இணைவது குறித்து ஒரு மனத்தடையை உண்டாக்கிவிட்டது.
அத்தோடுதான் தலைவரை அவர் சந்தித்திருக்கிறார். சந்திப்பில் இருவரும் அரசியல் குறித்து நிறைய பேசி பரஸ்பரம் நிறைய கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள். அது ஒரு சுமுமான மீட்டிங். ஆனால், இந்த மீட்டிங் மேலே நடந்துகொண்டிருக்கையிலேயே அந்த பவர்புல் டீம் அந்த பெண் நிர்வாகி சார்ந்த கட்சிக்குத் தகவலை கசியவிட்டிருக்கிறது. இந்த செயல் அந்த நிர்வாகியை இன்னும் சங்கடப்படுத்திவிட்டது.

'விஜய்யின் ஆர்வம்!'
ஆனாலும் தலைவருடனான சந்திப்பு நன்றாக சென்றதால் நம்பிக்கையோடு ஊருக்கு கிளம்பியிருந்தார். இதெல்லாம் டிசம்பரில் நடந்தது. அதன்பிறகு தலைவரும் பலமுறை 'அவங்க எப்ப சேருறாங்க?' என தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டேதான் இருந்திருக்கிறார். அந்த டீம்தான் உள்ளே புகுந்து அவர் திமுக, அதிமுகவோடும் பேசிக்கொண்டிருக்கிறார். நமக்கு செட் ஆகமாட்டார் என ஆட்டத்தையே கலைத்துவிட்டார்கள்.

இன்னொரு பக்கம் அந்த பெண் இன்னும் தவெகவிலிருந்து அழைப்பு வருமென காத்திருக்கிறார். மாற்றுக்கட்சியிலிருந்து நம் கட்சிக்கு வலுவான ஆட்கள் வருவது நமக்கு பலம்தானே. அது தெரிந்தும் ஏன் இப்படி செய்கிறார்கள்?' என பவர்புல் டீமின் மீது புகார் பத்திரம் வாசிக்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான இன்னொரு டீம்.
'நாங்கள் என்ன அரசியல் அகதிகளா?'
இலைக்கட்சியிலிருந்து உடைந்து நிற்கும் தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரும் தவெகவில் இணைய மூவ் செய்து கொண்டிருந்தார். அவரும் இப்போது முடிவை மறுபரிசீலனை செய்யும் மனநிலையில் இருக்கிறாராம். 'போயஸ்கார்டனில் உள்ள அலுவலகம் ஒன்றில் விஜய் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசினோம். அப்போதும் அந்த பவர்புல் டீமும் உடனிருந்தது. பேச்சுவார்த்தையில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. கடமைக்குப் பேசினார்கள்.

பின்னணியில் இப்படி பேச்சுவார்த்தை நடக்க, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்த் மேடையேறி, 'மாற்றுக்கட்சியிலிருந்து ஹெலிகாப்டரில் வந்தாலும் பதவியில்லை.' என்கிறார். பொதுக்குழுவிலும் இருக்கிற ஆட்களுக்கெல்லாம் பதவி கொடுத்துவிட்டு மீதமிருக்கும் இடத்தில் மாற்றுக்கட்சியினருக்கு பொறுப்பு என்பதைப் போல பேசுகிறார். நாங்கள் என்ன அரசியல் அகதிகளா? வாய்ப்பே இல்லாமல் இவர்களிடம் வந்து தஞ்சம் புக? எங்களுக்கென ஒரு அரசியல் அனுபவம் இருக்கிறது.
மக்களின் மனநிலை என்ன தேர்தல் வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களை பக்கத்தில் வைத்துக் கொண்டால் விஜய்க்குதான் பலம். அது விஜய்யை சுற்றியிருப்பவர்களுக்கே தெரியவில்லை.' என கொந்தளிக்கிறது அந்த இலைக்கட்சி சம்பந்தப்பட்ட நிர்வாகி தரப்பு.

ஏற்கெனவே சில மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்டப் பிரச்னைகளை தலைமைக்கு எடுத்தே செல்ல முடியவில்லை. பொதுச்செயலாளருடன் ஒரு டீம் இருந்துகொண்டு வழியை மறிக்கிறார்கள் என புலம்புகிறார்கள். இப்போது மாற்றுக்கட்சியிலிருந்து இணைய நினைப்பவர்களிடமிருந்தும் அதிருப்தி குரல் ஒலிக்கிறது. அரசியலே இப்போதான் ஆரம்பிக்குது விஜய்!