US Issue: ``கைவிலங்குடன் 40 மணிநேர பயணம்; 19 பெண்கள் அவதி..'' -பிரதமருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!
பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கம் இந்தியர்களை நடத்திய விதத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அந்த வகையில் அதனது எக்ஸ் தளத்தில் "பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் செல்வப்பெருந்தகை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/jhj9skz1/GiiyuL_boAAdSAj.jpg)
அனைவருக்கும் ஒரே கழிப்பறை!
அவரது பதிவில், "அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம், இந்தியர்கள் 104 நபர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, 40 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
இதற்குதான் 100 கோடியில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியா?
"வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதான் என்கிறார். கொலம்பியா போன்ற ஒரு சிறிய நாடு, தனது நாட்டின் பிரஜைகளுக்கு துணை நின்று, அமெரிக்கா மீது தனது கோபத்தை காட்டியது. ஆனால், விஸ்வகுரு என்று பாஜகவினரால் சிலாகிக்கப்பட்டு, ஒரு பொய் பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/qayagc6z/ERinaACUcAAE_w_.jpg)
இதற்குதான் இந்திய நாட்டினரின் வரிப்பணத்தில் இருந்து 100 கோடிக்கும் மேல் செலவு செய்து 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தினாரா பிரதமர் மோடி?" என்று தெரிவித்துள்ளார்.