மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்
அக்னி நட்சத்திரம் தொடங்கியது! வெளியானது மழைப்பொழிவு நிலவரம்!!
சென்னை: வெய்யில் இப்படி கொளுத்துகிறதே என்று புலம்பிவந்த தமிழக மக்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று தெரிந்தபோதே வெப்பத்துக்கு இணையாக அச்சமும் அதிகரித்தது.
இதோ அதோ என்று சொல்லிவந்த அக்னி நட்சத்திரமும் மே 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவிட்டது. மதியம் 12 மணிக்கு வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பமும் கொளுத்தியது. பொது இடங்களிலும் வழக்கமாக இருப்பது போல் அல்லாமல் மக்களின் நடமாட்டமும் குறைந்தே காணப்பட்டது.
ஆனால், நிலைமை சற்று நேரத்துக்கெல்லாம் மாறியது. பிற்பகல் 3 மணிக்கெல்லாம் வானம் மேகமூட்டமாக மாறியது. சூறாவளிக் காற்றும் வீசத் தொடங்கியது. வெய்யிலுக்காக வீட்டுக்குள்ளே முடங்கியவர்கள், வானிலை மாற்றத்தைக் கண்டு வியந்தனர். 3.30 மணிக்கு சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வெறுமனே தூறுல் போட்டுவிட்டு ஏமாற்றிவிடாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்து தரையை ஈரமாக்கிச் சென்றது.
நேற்று நீட் தேர்வு என்பதால், பிள்ளைகளை தேர்வு மையத்துக்குள் விட்டுவிட்டு, நிழலுக்கு ஏதேனும் கூரை கீழே நின்றிருந்தவர்களின் நிலைதான் மோசமானது.
இந்த நிலையில்தான் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு ( மில்லி மீட்டரில் ) நிலவரம் வெளியாகியிருக்கிறது.
அதன்படி,
ராமேஸ்வரம் - 89 மி.மீ.
மத்தூர் (கடலூர்) - 87 மி.மீ.
விருத்தாசலம் - 87 மி.மீ.
சீர்காழி - 84.6 மி.மீ.
வேப்பூர் (கடலூர்) - 75 மி.மீ.
குப்பநத்தம் (கடலூர்) - 72.8 மி.மீ.
புள்ளம்பாடி (திருச்சி)- 72.6 மி.மீ.
பரங்கிப்பேட்டை (கடலூர்) - 72.2 மி.மீ.
உப்பாறு அணை (திருப்பூர்) - 69 மி.மீ.
சின்னக் கல்லார் (கோவை) - 49 மி.மீ.
மாமல்லபுரம் - 48 மி.மீ.
தம்மம்பட்டி (சேலம்) - 48 மி.மீ.
ஆவடி (திருவள்ளூர்) - 48 மி.மீ.
அண்ணாமலை நகர் (கடலூர்) - 46.4 மி.மீ. என மழைப் பதிவாகியுள்ளது.
சென்னையிலேயே பலத்த மழை பெய்ததாக நினைத்தாலும். இந்தப் பட்டியலில் சென்னையே இடம்பெறாத வகையில் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கடலூரில் பலத்த மழைப் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.